விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: மகாராஷ்டிரா அம்டி பாத் ரெசிபி

By Maha

இன்னும் ஒரு வாரத்தில் விநாயர் சதுர்த்தி பண்டிகை வரப்போகிறது. இந்து மதத்தில் அனைவராலும் விமரிசையாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை தான் விநாயர் சதுர்த்தி. அனைவருக்கும் பிடித்த கடவுளான விநாயகர் பிறந்த நாளைத் தான் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகின்றோம். இந்நாளன்று எப்போதும் ஒரே மாதிரியான ரெசிபிக்களை செய்யாமல் சற்று வித்தியாசமான ரெசிபிக்களை முயற்சிக்கலாம்.

அதில் இங்கு மகாராஷ்டிராவில் பிரபலமான அம்டி பாத் என்னும் ரெசிபியைக் கொடுத்துள்ளோம். ரெசிபியின் பெயரே புரியவில்லையா? இந்த ரெசிபியின் பெயரில் உள்ள அம்டி என்றால் மராத்தியில் காரமான பருப்பு என்றும், பாத் என்றால் சாதம் என்றும் அர்த்தம். சொல்லப்போனால், இதுவும் தமிழ்நாட்டில் செய்யப்படும் ஒரு சாதாரண ரெசிபி தான். ஆனால் ரெசிபியில் பயன்படுத்தும் பொருட்களில் மட்டும் மாற்றங்கள் இருக்கும். சரி, இப்போது அந்த அம்டி பாத் ரெசிபியைப் பார்ப்போமா!!!

Maharastrian Amti Bhaat: Ganesh Chaturthi Special

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 1 கப்
வெந்தயம் - 1/2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது
நாட்டுச்சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
புளிச்சாறு - 2 டீஸ்பூன்
கோடா மசாலா - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்

கோடா மசாலாவிற்கு...

மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்
எள் - 1 டேபிள் ஸ்பூன்
கிராம்பு - 5-6
கருப்பு ஏலக்காய் - 2
பட்டை - 2
மிளகு - 8-10
பிரியாணி இலை - 2
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கோடா மசாலாவிற்கு கொடுத்த பொருட்களைப் போட்டு, தீயை குறைவில் வைத்து, 2 நிமிடம் வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.

பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தம், கடுகு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து, 2-3 நிமிடம் தாளிக்க வேண்டும்.

பின் அதில் வேக வைத்துள்ள துவரம் பருப்பைப் போட்டு, நன்கு கிளறி விட வேண்டும்.

அடுத்து நாட்டுச்சர்க்கரை மற்றும் புளிச்சாறு ஊற்றி கிளறி, கொதிக்க விட வேண்டும்.

பிறகு 2 டீஸ்பூன் கோடா மசாலாவை சேர்த்து, தீயை குறைவில் வைத்து 4-5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, அதன் மேல் கொத்தமல்லியைத் தூவினால், மகாராஷ்டிரா ரெசிபியான அம்டி பாத் ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.

Story first published: Monday, September 2, 2013, 13:52 [IST]
Desktop Bottom Promotion