சோள புட்டு

By Maha

மாலை வேளையில் பசிக்கும் போது, வடை, பஜ்ஜி என்று மட்டும் செய்து சாப்பிடாமல், ஆரோக்கியமாக புட்டு செய்து சாப்பிடலாம். அதிலும் எப்போதும் போல ஒரே மாதிரியாக அரிசி மாவை கொண்டு மட்டும் புட்டு செய்யாமல், ராகி, சோளம் போன்றவற்றைப் பயன்படுத்தி செய்து சுவையுங்கள்.

இங்கு சோளம் கொண்டு எப்படி புட்டு செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்துப் பாருங்கள்.

Broken Corn Puttu

தேவையான பொருட்கள்:

சோள ரவை - 1 கப்
அரிசி மாவு - 1 கப்
துருவிய தேங்காய் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
வெதுவெதுப்பான தண்ணீர் - 3/4 கப்

செய்முறை:

முதலில் சோள ரவையை வாங்கி அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பௌலில் அதனைப் போட்டு, அத்துடன் அரிசி மாவு, உப்பு, சர்க்கரை சேர்த்து, அத்துடன் வெதுவெதுப்பான நீரை சேர்த்து புட்டு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்பு இட்லி பாத்திரத்தை எடுத்து, அதில் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.

பிறகு இட்லி தட்டில் ஈரத் துணியை விரித்து, அதில் புட்டு மாவை தூவி தனியாக வைத்துக் கொள்ளவும்.

இட்லி பாத்திரத்தில் உள்ள தண்ணீர் கொதித்ததும், மூடியைத் திறந்து, அதில் இட்லி தட்டை வைத்து மீண்டும் மூடி வேக வைத்து இறக்க வேண்டும்.

இறுதியில் அதனை இறக்கி, அதன் மேல் துருவிய தேங்காயை போட்டு பிரட்டி பரிமாறினால், சோள புட்டு ரெடி!!!

Image Courtesy: yummytummyaarthi

Story first published: Wednesday, April 1, 2015, 17:10 [IST]
Desktop Bottom Promotion