பாகற்காய் புளிக்குழம்பு

By Maha

பாகற்காயை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வந்தால், உடலில் தங்கியுள்ள கிருமிகளை வெளியேற்றி, உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம். மேலும் பாகற்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் பாகற்காய்க்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும் தன்மை உள்ளது.

பலருக்கு பாகற்காய் கசப்பாக இருப்பதால், அதனை சாப்பிட மறுப்பார்கள். ஆனால் பாகற்காயை குழம்பு செய்து சாப்பிட்டால், அதன் கசப்பு அவ்வளவாக தெரியாது. இங்கு அந்த பாகற்காய் புளிக்குழம்பை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம்.

Bittergourd Tamarind Curry

தேவையான பொருட்கள்:

பாகற்காய் - 200 கிராம் (வட்டமாக நறுக்கியது)
சின்ன வெங்காயம் - 50 கிராம் (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 100 கிராம் (நறுக்கியது)
புளி - 1 எலுமிச்சை அளவு
குழம்பு மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் புளியை நீரில் போட்டு 1/4 மணிநேரம் ஊற வைத்து, நன்கு பிசைந்து நீரை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பாகற்காயையும் அத்துடன் சேர்த்து வதக்கி விட்டு, தக்காளியைப் போட்டு 5 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

பின்பு அதில் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து 1 நிமிடம் கிளறி, பின் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து பாகற்காய் வேகும் வரை 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.

பிறகு அதில் புளி நீரை ஊற்றி, நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு, இறுதியில் சர்க்கரையை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பாகற்காய் புளிக்குழம்பு ரெடி!!!

Story first published: Monday, March 10, 2014, 13:17 [IST]
Desktop Bottom Promotion