வாழைப்பூ உருண்டை குழம்பு

Posted By:

தினமும் ஒரே மாதிரியான குழம்பு செய்து போரடித்துவிட்டதா? அவ்வப்போது சற்று வித்தியாசமான ரெசிபிக்களை வீட்டில் செய்து சுவைக்க விரும்புவீர்களா? உங்கள் வீட்டில் வாழைப்பூ உள்ளதா? அப்படியானால் அந்த வாழைப்பூவைக் கொண்டு ஒரு உருண்டை தயாரித்து, குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த வாழைப்பூ உருண்டை குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம்.

வீட்டில் வைக்கும் புளிக்குழம்பு போன்று தான் இந்த ரெசிபியையும் செய்ய வேண்டும். ஆனால் என்ன, இதில் காய்கறிகளுக்கு பதிலாக வாழைப்பூ உருண்டை தயாரித்து சேர்க்க வேண்டும். உங்களுக்கு வாழைப்பூ உருண்டை குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

Vazhaipoo Urundai Kuzhambu Recipe In Tamil

கீழே வாழைப்பூ உருண்டை குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* வாழைப்பூ - சிறியது

* துவரம் பருப்பு - 100 கிராம்

* கடலைப்பருப்பு - 4 டேபிள் ஸ்பூன்

* வரமிளகாய் - 2

* சோம்பு - 1 டீஸ்பூன்

* பூண்டு - 3 பல்

* இஞ்சி - 1 இன்ச்

குழம்பிற்கு...

* வெங்காயம் - 1

* தக்காளி - 1

* மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்

* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

* புளி - 1 பெரிய நெல்லி அளவு

* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

* கடுகு - 1/2 டீஸ்பூன்

* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

* கறிவேப்பிலை - சிறிது

* பெருங்காயத் தூள் - சிறிது

செய்முறை:

* முதலில் வாழைப்பூவை சுத்தம் செய்து, அதை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். கடலைப்பருப்பு மற்றும் துவரம் பருப்பை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். புளியை நீரில் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வாழைப்பூவை போட்டு சிறிது நேரம் வதக்கி இறக்கிக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஊற வைத்துள்ள பருப்புக்களை கழுவி, அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் வரமிளகாய், சோம்பு, இஞ்சி, பூண்டு சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு அரைத்த பருப்பை வதக்கிய வாழைப்பூவுடன் சேர்த்து நன்கு பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

* பின் உருட்டிய உருண்டைகளை இட்லி தட்டில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.

* அடுத்து தக்காளியை சேர்த்து, மஞ்சள் தூளை சேர்த்து கிளறி, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* பின் அதில் குழம்பு மிளகாய் தூளை சேர்த்து 1 நிமிடம் வதக்கி, புளிச்சாற்றினை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.

* பிறகு வேக வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான வாழைப்பூ உருண்டை குழம்பு தயார்.

Image Courtesy: gomathirecipes

[ of 5 - Users]
Story first published: Tuesday, March 28, 2023, 13:04 [IST]
Desktop Bottom Promotion