வரலட்சுமி விரதம் ஸ்பெஷல் பால் பாயாசம் - இந்த பக்குவத்துல செய்யுங்க.. டேஸ்ட் அள்ளும்..

Posted By:

Varalakshmi Vratham Special Paal Payasam Recipe In Tamil: இன்று வரலட்சுமி விரதம். சுமங்கலி பெண்கள் பலரும் இந்த வரலட்சுமி நோன்பை மேற்கொள்வதன் மூலம் செல்வம், தானியம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், குழந்தைகள், வெற்றி, புகழ் போன்றவை கிடைக்கும்.

வரலட்சுமி நோன்பு அன்று லட்சுமி தேவிக்கு பூஜை செய்யும் போது 5, 7 அல்லது 9 விதமான பலகாரங்களை செய்து படைத்து வழிபடுவார்கள். அந்த பலகாரங்களில் பெரும்பாலும் இனிப்புக்கள் தான் இருக்கும். பொதுவாக ஒரு பண்டிகை அல்லது சுப நாட்கள் என்றால், நிச்சயம் வீட்டில் பாயாசம் செய்வோம். இந்த வரலட்சுமி நோன்பு நாளில் லட்சுமி தேவிக்கு ஸ்பெஷலான ஒரு பாயாசத்தை செய்து படைத்து வழிபட நினைத்தால், லட்சுமி தேவிக்குரிய பொருட்களைக் கொண்டு பால் பாயாசம் செய்து படைத்து வழிபடுங்கள்.

Varalakshmi Vratham Special Recipe How To Make a Paal Payasam Recipe

உங்களுக்கு நல்ல சுவையான பால் பாயாசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பால் பாயாசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பச்சரிசி - 2 கைப்பிடி
* பாசிப்பருப்பு - 1 கைப்பிடி
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சுடுநீர் - 1/2 கப்
* காய்ச்சி ஆற வைத்த பால் - 3/4 லிட்டர் + 1/4 லிட்டர்
* வெல்லம் - 1/4 கிலோ
* தண்ணீர் - 1/2 கப்
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
* முந்திரி - 10
* உலர் திராட்சை - 10
* குங்குமப்பூ - 1 சிட்டிகை
* பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை
* உப்பு - 1 சிட்டிகை

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை ஒன்றாக எடுத்து, நீரில் 10 நிமிடம் ஊற வைத்து, பின் நீரை வடிகட்டிவிட்டு, உலர்த்த வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் உலர்த்திய பச்சரிசி, பாசிப்பருப்பை சேர்த்து ஒருமுறை கொரகொரவென்று லேசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், பொடித்த அரிசி பருப்பை சேர்த்து நல்ல மணம் வந்து லேசாக நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 1/2 கப் சுடுநீரை ஊற்றி, நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் காய்ச்சிய ஆற வைத்த 3/4 லிட்டர் பாலை ஊற்றி கிளறி விட்டு, குறைவான தீயில் வைத்து, 15 நிமிடம் அரிசி மற்றும் பருப்பை வேக வைக்க வேண்டும். அப்படி வேகும் போது கெட்டியாகிவிட்டால், 1/4 கப் பாலை ஊற்றி கிளறி வேக வைக்க வேண்டும்.
* அதற்குள் மற்றொரு அடுப்பில் வெல்லத்தை தட்டிப் போட்டு, 1/2 கப் நீரை ஊற்றி கலந்து, வெல்லம் கரைந்ததும், அதை இறக்கி வடிகட்டி ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், முந்திரி, உலர் திராட்சை சேர்த்து வறுத்து இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அரிசி பருப்பு வெந்ததும், அதில் கரைத்து வைத்துள்ள வெல்ல நீரை ஊற்றி கிளறி, 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் ஏலக்காய் தூள், குங்குமப்பூ, பச்சை கற்பூரம் சேர்த்து கிளறி, ப்ரை செய்து வைத்துள்ள முந்திரி, உலர் திராட்சையை நெய்யுடன் அப்படியே சேர்த்து கிளறி, கடைசியாக 1 சிட்டிகை உப்பு சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பால் பாயாசம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, August 8, 2025, 13:46 [IST]
Desktop Bottom Promotion