வண்டிக்கடை ஸ்பெஷல் வடகறி - ஈஸியா எப்படி செய்றதுன்னு பார்த்து செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்..

Posted By:

Vandikadai Special Vada Curry Recipe In Tamil: காலையில் செய்யும் இட்லி, தோசைக்கு ஒரே மாதிரி சட்னி, சாம்பார் செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் ஒருமுறை வடகறி செய்யுங்கள். இந்த வடகறியை 2 விதங்களில் செய்வார்கள். ஒன்று வடையை பொரித்து செய்வார்கள். இரண்டாவது வேக வைத்து செய்வார்கள்.

ஆனால் வண்டிக்கடையில் வேக வைத்து தான் செய்வார்கள். அதோடு எண்ணெய் குறைவாகவும் சேர்த்து செய்வதால், ஆரோக்கியமானதும் கூட. முக்கியமாக இந்த வடகறியை செய்தால், வீட்டில் உள்ளோர் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.

Vadacurry How To Make a Vandikadai Special Vada Curry Recipe

உங்களுக்கு வண்டிக்கடை ஸ்பெஷல் வடகறி ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வண்டிக்கடை ஸ்பெஷல் வடகறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு...

* கடலைப் பருப்பு - 1 கப்
* வரமிளகாய் - 2
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 2 பல்
* உப்பு - சுவைக்கேற்ப

வடகறிக்கு...

* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1
* பிரியாணி இலை - 1
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கிராம்பு - 4
* ஏலக்காய் - 1
* கல்பாசி - சிறிது
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* புதினா - சிறிது
* மஞ்சள் தூள் - 1/4
* குழம்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 2-3 கப்
* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் கடலைப் பருப்பை நீரில் 2-3 முறை கழுவி, நீரை ஊற்றி, குறைந்தது 4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். 4 மணிநேரம் கழித்து, நீரை முழுமையாக வடிகட்டிவிட வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் கடலைப்பருப்பு, வரமிளகாய், சோம்பு, பூண்டு சேர்த்து, நீர் ஊற்றாமல் கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்ததை ஒரு பாத்திரத்தில் போட்டு, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கைகளால் பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, இட்லி தட்டில் வைக்க வேண்டும்.
* பிறகு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நீரை ஊற்றி, நீர் சூடானதும், இட்லி தட்டை உள்ளே வைத்து மூடி, 7-8 நிமிடம் வேக வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, பிரியாணி இலை, சோம்பு, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள் சேர்த்து, 1 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 2-3 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து, நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், வேக வைத்துள்ள பருப்பு கலவையை கைகளால் உதிர்த்துவிட்டு சேர்த்து கிளறி, குக்கரை மூடி வைத்து, 1 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான வடகறி தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, January 30, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion