சிக்கன் குருமா சுவையில் தக்காளி குருமா- எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..

Posted By:

Tomato Kurma Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு சிம்பிளான, அதே சமயம் ருசியான ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் தக்காளி குருமாவை செய்யுங்கள். அதுவும் வழக்கமாக செய்வது போன்று தக்காளி குருமா செய்யாமல், ஒருமுறை மசாலா அரைத்து தக்காளி குருமாவை செய்யுங்கள். இந்த குருமா சப்பாத்திக்கு மட்டுமின்றி, இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த குருமா சிக்கன் குருமாவை போன்று இருப்பதால், வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை அதிகமாக சாப்பிடுவார்கள்.

Tomato Kurma How To Make Simple And Tasty Thakkali Kurma

இந்த தக்காளி குருமா ரெசிபி ஈரோடு அம்மாச்சி சமையல் என்னும் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு சிக்கன் குருமா சுவையில் தக்காளி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் குருமா சுவையில் தக்காளி குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

மசாலா அரைப்பதற்கு..

* சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி
* தேங்காய் - 1/4 மூடி (நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
* முந்திரி - 5

குருமா தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கிராம்பு - 2
* பட்டை - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 3 (நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* சிக்கன் மசாலா - 1 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது + தேவையான அளவு
* அரைத்த மசாலா
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் சின்ன வெங்காயம், தேங்காய், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, கிராம்பு, பட்டை, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் வதக்கிய தக்காளியை மட்டும் எடுத்து, ஜாரில் உள்ள தேங்காயுடன் சேர்த்து, அத்துடன் 5 முந்திரியையும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு குக்கரில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் சிக்கன் மசாலாவை சேர்த்து ஒருமுறை கிளறி, சிறிது நீரை ஊற்றி, ஒரு கொதி விட வேண்டும்.
* கொதி வந்ததும், அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, குருமாவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, குக்கரை மூடி, 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவினால், சுவையான தக்காளி குருமா தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, April 17, 2026, 19:57 [IST]
Desktop Bottom Promotion