1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்..

Posted By:

Thuvaram Paruppu Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் இட்லி, தோசை தான் காலை டிபனாக இருக்குமா? இந்த டிபனுக்கு ஒவ்வொரு நாளும் சைடு டிஷ் முடிவு செய்து பெரிய வேலையாக இருக்குமா? அப்படியானால் இன்று உங்கள் வேலையை எளிதாக்கும் வகையில் ஒரு அருமையான சைடு டிஷ் ரெசிபியைத் தான் பார்க்கப் போகிறோம். அது தான் துவரம் பருப்பு சட்னி. இந்த சட்னியை இட்லி, தோசையுடன் சாப்பிடும் போது, சுவை மிகவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சட்னி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும்.

Thuvaram Paruppu Chutney How To Make This Healthy Toor Dal Chutney

உங்களுக்கு இந்த துவரம் பருப்பு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே துவரம் பருப்பு சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* துவரம் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன் அல்லது 1/4 கப்
* வரமிளகாய் - 5
* சின்ன வெங்காயம் - 15
* பூண்டு - 10
* கறிவேப்பிலை - 1 கொத்து
* துருவிய தேங்காய் - 1 கப்
* கொத்தமல்லி - 1/2 கைப்பிடி
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், துவரம் பருப்பை சேர்த்து மிதமான தீயில் வைத்து பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வரமிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு பற்கள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் துருவிய தேங்காய் சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் கொத்தமல்லியை சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன் புளி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில் நீரை ஊற்றி அலசி சட்னியுடன் சேர்த்து கலந்து விட வேண்டும்.
* இறுதியாக சட்னியை தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான துவரம் பருப்பு சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, July 1, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion