ஒருமுறை தக்காளி சட்னியை இப்படி செஞ்சு பாருங்க.. வீட்டுல இருக்குறவங்க 2 தோசை எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..

Posted By:

Thakkali Kara Chutney Recipe In Tamil: காலையில் வீட்டில் தோசை சுட போகிறீர்களா? அந்த தோசைக்கு என்ன சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் தோசைக்கு பெரும்பாலும் தக்காளி சட்னியைத் தான் விரும்புவார்களா? அப்படியானால் எப்போதும் செய்வது போன்று தக்காளி சட்னியை செய்யாமல், இன்று சற்று வித்தியாசமான முறையில் தக்காளி சட்னியை செய்யுங்கள்.

அதாவது தக்காளி சட்னிக்கு பொருட்களை வதக்கிய பின், அத்துடன் சிறிது பொட்டுக்கடலை சேர்த்து அரையுங்கள். இந்த தக்காளி கார சட்னி தோசை, இட்லி, சப்பாத்தி போன்றவற்றுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த ஸ்டைலில் தக்காளி சட்னியை செய்தால் ஒரு தோசை சாப்பிடும் உங்கள் குழந்தை இன்னொரு தோசையை கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

Thakkali Kara Chutney: How To Make a Tomato Kara Chutney Recipe

உங்களுக்கு இந்த தக்காளி கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி கார சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 4 (காரத்திற்கு ஏற்ப)
* சின்ன வெங்காயம் - 100 கிராம்/பெரிய வெங்காயம் - 2
* பூண்டு - 7 பல்
* பெரிய தக்காளி - 2 (நறுக்கியது)
* பொட்டுக்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாயை சேர்த்து லேசாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே எண்ணெயில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து, நன்கு மென்மையாகும் வரை வதக்கி இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் பொட்டுக்கடலை சேர்த்து 2 நிமிடம் கிளறி விட்டு, குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்கள் மற்றும் வரமிளகாயை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான தக்காளி கார சட்னி தயார்.

Image Courtesy: BetterButter

[ of 5 - Users]
Desktop Bottom Promotion