மாம்பழ பாயாசம்

By Maha

மாம்பழ சீசன் என்பதால் மார்கெட்டில் மாம்பழம் விலைக் குறைவாக கிடைக்கும். அப்படி விலைக்குறைவில் கிடைக்கும் மாம்பழங்களை அப்படியே ருசிப்பதைத் தவிர்த்து, இன்று சற்று வித்தியாசமாக அதனைக் கொண்டு பாயாசம் செய்து சுவைத்துப் பாருங்கள்.

இங்கு மாம்பழத்தைக் கொண்டு பாயாசம் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 2 டீஸ்பூன்
பால் - 2 கப்
சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
மாம்பழ கூழ் - 1/2 கப்
குங்குமப்பூ - 1 சிட்டிகை
கண்டென்ஸ்டு மில்க் - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
முந்திரி - 5
மாம்பழம் - சிறிது
ஏலக்காய் - 1 சிட்டிகை

செய்முறை:

முதலில் பாசுமதி அரிசியை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின் 1 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூ சேர்த்து ஊற வைக்கவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, பொடித்த அரிசியை சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும்.

பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, அதனுள் அந்த பால் பாத்திரத்தை வைத்து, அத்துடன் குங்குமப்பூ பாலையும் ஊற்றி பாத்திரத்தை தட்டு கொண்டு மூடி, பின் குக்கரை மூடி 15-20 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும்.

பின் அதனை ஒரு அகன்ற கடாயில் ஊற்றி, அத்துடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து, குறைவான தீயில் 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

பிறகு அதில் கண்டென்ஸ்டு மில்க்கை சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து இறக்கி குளிர வைத்து, மாம்பழக் கூழ் மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து கிளறி, மேலே முந்திரியையும், சிறிது மாம்பழத் துண்டுகளையும் தூவினால், மாம்பழ பாயாசம் ரெடி!!!

Image Courtesy: sharmispassions

Desktop Bottom Promotion