கேரளா பருப்பு பாயாசம்

By Maha

கேரளாவில் கொண்டாடப்படும் மிகவும் பிரபலமான ஓர் பண்டிகை தான் ஓணம். பத்து நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகையில் பல்வேறு வகையான ரெசிபிக்கள் சமைக்கப்படும். அதில் ஒன்று தான் கேரளா பருப்பு பாயாசம். பொதுவாக பருப்பு பாயாசம் என்றால் பாசிப்பருப்பு கொண்டு தான் செய்வோம். ஆனால் கேரளாவில் கடலைப் பருப்பு கொண்டு செய்யப்படும்.

சரி, இப்போது அந்த கேரளா பருப்பு பாயாசத்தை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து ஓணம் பண்டிகையன்று வீட்டில் செய்து சுவைத்து, எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு - 1/2 கப்
நாட்டுச்சர்க்கரை - 1/2 கப்
தேங்காய் பால் - 1/2 கப்
பால் - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 7
சுக்கு பொடி - 1 சிட்டிகை
நெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் நாட்டுச்சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி, தண்ணீரை கரைய நன்கு கெட்டியாக சூடேற்றி, பின் அதனை வட்டிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, குக்கரில் போட்டு, அதில் போதிய அளவில் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். (பருப்பு நன்கு மசியும் அளவில் வேக வைக்க வேண்டாம்.)

பின்பு நெய்யில் முந்திரியை வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு வடிகட்டி வைத்துள்ள வெல்லப் பாகுவை மீண்டும் அடுப்பில் வைத்து, 2 நிமிடம் சூடேற்றி, அதில் வேக வைத்துள்ள கடலைப் பருப்பு சேர்த்து கரண்டியால் பருப்பை மசித்து விட வேண்டும்.

பருப்பானது வெல்லப் பாகுவுடன் நன்கு ஒன்று சேர்ந்தவுடன், அதில் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பாயாசம் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சுக்கு பொடி, பால் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கி, முந்திரியைத் தூவினால், கேரளா பருப்பு பாயாசம் ரெடி!!!

Image Courtesy: sharmispassions

Desktop Bottom Promotion