மணமணக்கும்.... சுட்ட கருவாட்டு குழம்பு - எப்படி செய்யணும் தெரியுமா?

Posted By:

Sutta Karuvattu Kuzhambu Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு கருவாடு ரொம்ப பிடிக்குமா? அதனால் அடிக்கடி வீட்டில் கருவாட்டு குழம்பை செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை கருவாட்டு குழம்பை செய்வதாக இருந்தால், சுட்ட கருவாட்டு குழம்பை செய்யுங்கள்.

இந்த கருவாட்டு குழம்பு ஆளையே மயக்கும் அளவில் நல்ல மணத்துடன் இருக்கும். இந்த குழம்பை ஒருமுறை செய்தால், பின் எப்போதும் இப்படி தான் கருவாட்டு குழம்பை செய்வீர்கள். முக்கியமாக இந்த குழம்பில் முருங்கைக்காய் சேர்ப்பதால், இது இன்னும் அற்புதமான சுவையில் இருக்கும்.

Sutta Karuvattu Kuzhambu How To Make a Dry Fish Kuzhambu

உங்களுக்கு சுட்ட கருவாட்டு குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுட்ட கருவாட்டு குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கருவாடு - 15
* நல்லெண்ணெய் - 100 மிலி
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 6
* கறிவேப்பிலை - 2 கொத்து
* சின்ன வெங்காயம் - 1/4 கிலோ (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 10 பல்
* பச்சை மிளகாய் - 5
* தக்காளி - 200 கிராம் (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சிறிது
* முருங்கைக்காய் - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 4 டீஸ்பூன்
* புளி - 50 கிராம் (நீரில் ஊற வைத்தது)
* தண்ணீர் - தேவையான அளவு

அரைப்பதற்கு...

* தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
* சீரகம் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது

செய்முறை:

* முதலில் கருவாட்டை நெருப்பில் சுட்டு, சுடுநீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், வெந்தயம், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேடும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பூண்டு பற்கள், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் முருங்கைக்காயை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் ஊற வைத்துள்ள புளியைப் பிசைந்து, அந்த நீரை வடிகட்டி ஊற்றி கிளறி, சிறிது நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் தேங்காய், சீரகம் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த தேங்காய் விழுதை கொதித்துக் கொண்டிருக்கும் குழம்புடன் சேர்த்து, பச்சை வாசனை போக 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் சுட்ட கருவாட்டை சேர்த்து, 2-3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான சுட்ட கருவாட்டு குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, June 10, 2025, 16:31 [IST]
Desktop Bottom Promotion