கொளுத்தும் கோடையில் கற்றாழை வெச்சு.. இப்படி ஒருவாட்டி குழம்பு செய்யுங்க.. மீன் குழம்பு மாதிரி இருக்கும்..

Posted By:

Summer Special Aloe Vera Kuzhambu Recipe In Tamil: கோடை வெயிலின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், உடல் சூடு, நீரிழப்பு போன்ற பிரச்சனையால் நிறைய பேர் சிரமப்படுவார்கள். உங்கள் வீட்டில் உள்ளோரும் இப்படி உடல் சூட்டினால் அவதிப்படுகிறார்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் கற்றாழை இருந்தால், அதைக் கொண்டு குழம்பு செய்யுங்கள். என்னது கற்றாழையில் குழம்பா என்று கேட்கலாம். ஆம், கற்றாழையைக் கொண்டும் குழம்பு செய்யலாம். இந்த குழம்பு மீன் குழம்பு போன்று சுவையாக இருக்கும். ஒருமுறை இந்த குழம்பை உங்கள் வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுங்கள். நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள்.

Summer Special Aloe Vera Kuzhambu How To Make Katralai Kuzhambu

இந்த கற்றாழை குழம்பு குறித்து ஃபுட்டீதமிழா என்னும் இன்ஸ்டா பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த கற்றாழை குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கற்றாழை குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கற்றாழை - சிறிது
* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 10-15
* பூண்டு - 4 பல்
* தக்காளி - 2 (நறுக்கியது)

தாளிப்பதற்கு..

* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* தாளிப்பு வடகம் - சிறிது
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 4
* பூண்டு - 5 பல்
* சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
* அரைத்த விழுது
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* புளிச்சாறு - 1 கப்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் நற்பதமான கற்றாழையை எடுத்து, அதன் முட்பகுதியை நீக்கிவிட்டு, கண்ணாடி போன்ற சதைப்பகுதியை வெட்டி எடுத்துக் கொண்டு, நீரில் 7-8 முறை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பு வடகம், கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பூண்டு, நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த விழுதை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, புளிச்சாற்றினை சேர்த்து கிளறி, கழுவி வைத்துள்ள கற்றாழை மற்றும் கொத்தமல்லியைத் தூவி, நன்கு 10-15 நிமிடம் எண்ணெய் பிரிய கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான கற்றாழை குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, May 5, 2026, 14:20 [IST]
Desktop Bottom Promotion