ஸ்ரீரங்கம் ஸ்பெஷல் அரைச்சுவிட்ட வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அமிர்தமா இருக்கும்

Posted By:

Srirangam Arachuvitta Vatha Kulambu Recipe in Tamil: பெரும்பாலான வீடுகளில் சாம்பார் அல்லது புளிக்குழம்புதான் தினமும் சமைக்கும் பிரதான குழம்புகளாக இருக்கும். சில சமயங்களில் ஏதாவது குருமா செய்வார்கள். அதனால்தான் ஹோட்டல்களுக்கு சென்றால் அனைவரும் காரக்குழம்பு மற்றும் வத்தக் குழம்பு போன்றவற்றை விரும்பி சாப்பிடுகிறார்கள். வத்தக் குழம்பு வைக்கும் பக்குவம் தெரியாததால்தான் பெரும்பாலானவர்கள் அதை வீடுகளில் செய்வதில்லை. அப்படியே செய்தாலும் அது ஹோட்டல் பக்குவத்திற்கு இருப்பதில்லை.

Srirangam Arachuvitta Vatha Kulambu Recipe How to Make at Home in Tamil

வத்தக் குழம்புகளில் பல வகைகள் உள்ளது, அதிலும் ஸ்ரீரங்கம் ஸ்பெஷல் அரைச்சுவிட்ட வத்தக் குழம்பு மிகவும் பிரபலமானது மற்றும் தனித்துவமானது. இந்த அட்டகாசமான அரைச்சுவிட்ட வத்தக் குழம்பு சாப்பிட ஸ்ரீரங்கம்தான் செல்ல வேண்டுமென்று அவசியமில்லை. உங்கள் வீட்டிலேயே சூப்பராக செய்து சாப்பிடலாம். இதற்கு தேவையெல்லாம் ஒரு ஸ்பெஷல் பொடிதான். அதை நீங்களே எளிதாக தயாரிக்கலாம்.

உங்களுக்கு ஸ்ரீரங்கம் ஸ்பெஷல் அரைச்சு விட்ட வத்தக் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஸ்ரீரங்கம் ஸ்பெஷல் வத்தக் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
- சாம்பார் பொடி - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- சுண்டைக்காய் வத்தல் - ஒரு கைப்பிடி
- பூண்டு - 10 பல்
- நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
- வெல்லம் - ஒரு சிறிய துண்டு
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு

வறுத்து அரைக்க:

- நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
- கடுகு - அரை ஸ்பூன்
- வெந்தயம் - 1/4 ஸ்பூன்
- சீரகம் - 1/2 ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1/4 ஸ்பூன்
- வரமிளகாய் - 5
- கொத்தமல்லி விதை - 1 ஸ்பூன்
- துவரம்பருப்பு - ஒன்றரை ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- துருவிய தேங்காய் - 1 ஸ்பூன்

தாளிக்க:

- கடுகு - 1/2 ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது)
- பூண்டு - 3 பல் (பொடியாக நறுக்கியது)
- கறிவேப்பிலை - ஒரு கொத்து (பொடியாக நறுக்கியது)
- நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்

செய்முறை:

- புளியை 15 நிமிடங்கள் வெதுவெதுப்பான தண்ணீரில் ஊறவைத்து, 1 கப் தண்ணீர் சேர்த்து அதிலிருந்து சாறு பிழிந்து எடுக்கவும்.

- அதில் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து இதைத் தனியாக எடுத்து வைக்கவும்.

- ஒரு கடாயில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி, அதில் சுண்டைக்காய் வத்தலைச் சேர்த்து, நல்ல நறுமணம் வரும் வரை வறுக்கவும். இதையும் தனியாக வைக்கவும்.

- பின்னர் அதே கடாயில் வறுத்து அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும். தேங்காயை மட்டும் வறுக்க தேவையில்லை. எந்த பொருளையும் கருக்கி விடக்கூடாது. அடுப்பை அணைத்து விடவும்.

- இப்போது தேங்காயைச் சேர்த்து, நன்கு கிளறிவிடவும். கலவை ஆறியதும், சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

- இப்போது வறுத்து வைத்துள்ள சுண்டைக்காய்களை அந்த விழுதோடு சேர்த்து, தனியாக எடுத்து வைக்கவும்.

- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றிச் சூடாக்கவும், பின்னர் அதில் கடுகு, நறுக்கிய சின்ன வெங்காயம், நறுக்கிய பூண்டு மற்றும் முழுப் பூண்டுப் பற்கள், நறுக்கிய கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.

- பூண்டு லேசான பொன்னிறமாக மாறி, நறுமணம் வரும் வரை மிதமான தீயில் வதக்கிக்கொண்டே இருக்கவும்.

- பின்னர் அதில் புளிக்கரைசலைச் சேர்த்து, சிறிது நேரம் கொதிக்க விடவும். அதனுடன் வெல்லத்தைச் சேர்க்கவும்.

- இறுதியாக, சுண்டைக்காய்களுடன் சேர்த்து அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து, சிறிது நேரம் கொதிக்க விடவும்.

- குழம்பு கெட்டியாகி, அதன் அளவு சற்று குறையும். இந்த நேரத்தில் சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும். குழம்பு மிகவும் கெட்டியாகவும் இருக்கக்கூடாது, அதே சமயம் மிகவும் நீர்த்தும் இருக்கக்கூடாது.

- கடைசியாக, 2 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து, நன்கு கலக்கிவிடவும். குழம்பின் சுவை நன்கு அதிகரிப்பதற்கு, 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை மூடி வைத்து விடவும்.

- 1 மணி நேரத்திற்கு பின் சாதத்தில் ஊற்றி அப்பளம் மற்றும் பொரியலுடன் சேர்த்து சாப்பிடவும்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, May 20, 2026, 14:47 [IST]
Desktop Bottom Promotion