காரைக்குடி சுரைக்காய் மசியல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செம சைடிஷா இருக்கும்

Posted By:

Sorakkai Masiyal Recipe in Tamil: மதியம் சிம்பிளா அதிகம் மெனக்கெடாம சமையலை முடிக்க நினைக்கிறீங்களா? உங்கள் வீட்டில் சுரைக்காய் உள்ளதா? அப்படியானால் அதைவைத்து சுரைக்காய் மசியலை செய்து பாருங்கள். இந்த பக்குவத்தில் சுரைக்காய் கூட்டு செய்யும் போது, அது சூடான சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

Sorakkai Masiyal Recipe How to Make at Home in Tamil

இந்த காரைக்குடி ஸ்டைல் சுரைக்காய் மசியல் செய்வதற்கு ஈஸியாக இருப்பதால், பேச்சுலர்களும் இதை செய்யலாம். முக்கியமாக இந்த கூட்டு நீங்கள் வழக்கமாக செய்வதை விட சற்று வித்தியாசமான சுவையில் இருப்பதால், சுரைக்காய் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் சுரைக்காய் ஒரு நீர் காயாக இருப்பதால் இந்த மசியல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

உங்களுக்கு காரைக்குடி சுரைக்காய் மசியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காரைக்குடி சுரைக்காய் மசியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- ½ ஸ்பூன் கடுகு
- ½ ஸ்பூன் உளுத்தம்பருப்பு
- ½ ஸ்பூன் உடைத்த தனியா
- ¼ ஸ்பூன் சீரகம்
- 1 சுரைக்காய்
- 1 பெரிய வெங்காயம்
- 1 தக்காளி
- சிறிய துண்டு புளி
- 1 இன்ச் இஞ்சி
- 5 பூண்டு பல்
- 1 ஸ்பூன் சாம்பார் தூள்
- ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
- தேவையான அளவு - உப்பு
- தேவையான அளவு - தண்ணீர்

தாளிக்க:

- 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- ½ தேக்கரண்டி கடுகு
- 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
- 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
- 1 காய்ந்த மிளகாய்
- சிறிதளவு கறிவேப்பிலை
- ¼ ஸ்பூன் பெருங்காயம்
- ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலைகள்

செய்முறை:

- சுரைக்காயைக் கழுவித் தோலை உரிக்கவும். அதன் மையத்தில் உள்ள பஞ்சு போன்ற பகுதியை நீக்கிவிட்டு, அதை அப்புறப்படுத்தவும். பின்னர் சுரைக்காயை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கவும். அதேபோல வெங்காயம், பூண்டு, இஞ்சி, தக்காளி ஆகியவற்றைக் கழுவி நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

- ஒரு பிரஷர் குக்கரில் எண்ணெயை விட்டுச் சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு, நசுக்கிய தனியா விதைகள் மற்றும் சீரகம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.

- கடுகு பொரிந்ததும் வெங்காயம், பூண்டுப் பல் மற்றும் நறுக்கிய இஞ்சித் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும்.

- வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் தக்காளி சேர்த்து, அது நன்கு குழையும் வரை வதக்கவும்.

- தக்காளி வெந்ததும் அதில் சுரைக்காய் துண்டுகள், சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்க்கவும்.

- மிதமான தீயில் ஒரு விசில் வரும் வரை பிரஷர் குக்கரில் வேக வைக்கவும். ஆவி வெளியேறிய பிறகு மூடியைத் திறக்கவும்.

- அதிகப்படியான தண்ணீரை வடித்துவிட்டு தனியாக வைக்கவும். அனைத்தையும் நன்றாக மசித்து ஒரு கொரகொரப்பான விழுதாக மாற்றவும்.

- பின்னர் தனியாக எடுத்து வைத்திருந்த தண்ணீரைச் சேர்த்து, அது கெட்டியாகும் வரை சில நிமிடங்கள் கொதிக்க விடவும். அடுப்பை அணைத்து, கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும்.

- மசியலை தாளிக்க ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.

- எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வர மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்துத் தாளிக்கவும்.

- பின்னர் இதை மசியலில் சேர்த்து நன்றாக கிளறவும். இதை சூடான சாதத்தில் நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Monday, May 4, 2026, 16:09 [IST]
Desktop Bottom Promotion