சேனைக்கிழங்கை இப்படி வறுவல் செய்யுங்க.. மட்டன் சுவையே தோத்துப் போயிடும்...

Posted By:

Senaikizhangu Kari Varuval Recipe In Tamil: மதிய வேளையில் சாதத்திற்கு ஒரு அட்டகாசமான வறுவல் சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சேனைக்கிழங்கு உள்ளதா? அப்படியானால் கவலையை விடுங்கள். அதைக் கொண்டே சூப்பரான கறிவறுவல் செய்யலாம்.

இந்த சேனைக்கிழங்கு கறிவறுவலானது மட்டன் சுவையையே மிஞ்சும் வகையில் ருசியாக இருக்கும். இதை சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சாப்பிடலாம். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

Senaikizhangu Kari Varuval How To Make a Senaikizhangu Kari Varuval Recipe

உங்களுக்கு சேனைக்கிழங்கு கறிவறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சேனைக்கிழங்கு கறிவறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சேனைக்கிழங்கு - 1/4 கிலோ
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
* எண்ணெய் - 4 டீஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது

அரைப்பதற்கு...

* துருவிய தேங்காய் - 3 டீஸ்பூன்
* கசகசா - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 3

செய்முறை:

* முதலில் சேனைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, அதை சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நீரை ஊற்றி, சிறிது கல் உப்பு சேர்த்து நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், துண்டுகளாக்கப்பட்ட சேனைக்கிழங்கை சேர்த்து 50 சதவீதம் வரை வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், சேனைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து ஒருமுறை வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், கசகசா, சோம்பு, மிளகு, சீரகம், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 4 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொரித்து வைத்துள்ள சேனைக்கிழங்கை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து கிளறி, சிறிது நீரை ஊற்றி பிரட்டி மூடி வைத்து, 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, சேனைக்கிழங்கை மிதமான தீயில் வைத்து, நீரை வற்ற வைக்க வேண்டும்.
* நீர் வற்றியதும், உயர் தீயில் வைத்து, நிறம் மாறும் வரை நன்கு கிளறி இறக்கினால், சுவையான சேனைக்கிழங்கு கறி வறுவல் தயார்.

Image Courtesy: Rockfort samayal

[ of 5 - Users]
Story first published: Wednesday, August 21, 2024, 12:00 [IST]
Desktop Bottom Promotion