திண்டுக்கல் பொன்ராம் சீரக சம்பா மட்டன் பிரியாணி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..

Posted By:

Dindigul Ponram Style Seeraga Samba Mutton Biryani In Tamil: இந்த வார இறுதியில் உங்கள் வாய்க்கு விருந்தளிக்கும் வகையில் ஏதாவது செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பிரியாணி என்றால் பிடிக்குமா? அடிக்கடி வித்தியாசமான சுவையுடைய பிரியாணியை செய்து சாப்பிடும் வழக்கம் உள்ளதா?

அப்படியானால் இந்த வாரம் திண்டுக்கல் பொன்ராம் ஸ்பெஷல் சீரக சம்பா மட்டன் பிரியாணியை செய்யுங்கள். இந்த பிரியாணி செய்வது மிகவும் சுலபம். மேலும் ஒருமுறை இந்த பிரியாணியை செய்தால், பின் மாதம் 1-2 முறை நிச்சயம் செய்து சாப்பிடுவீர்கள். பேச்சுலர்கள் கூட இந்த பிரியாணியை ட்ரை செய்யலாம்.

Seeraga Samba Mutton Biryani How To Make a Dindigul Ponram Style Mutton Biryani

உங்களுக்கு திண்டுக்கல் பொன்ராம் ஸ்டைல் சீரக சம்பா மட்டன் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே திண்டுக்கல் பொன்ராம் ஸ்டைல் சீரக சம்பா மட்டன் பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சீரக சம்பா அரிசி - 3/4 கிலோ
* மட்டன் - 3/4 கிலோ

அரைப்பதற்கு...

* பூண்டு - 2 கைப்பிடி
* இஞ்சி - 1 கையளவு
* பச்சை மிளகாய் - 6
* சின்ன வெங்காயம் - 2 கைப்பிடி
* புதினா - 1 கைப்பிடி
* கொத்தமல்லி - 1 கைப்பிடி

பொடிக்கு...

* மிளகு - 1 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* மல்லி - 1 டீஸ்பூன்
* சோம்பு - 3/4 டீஸ்பூன்
* ஏலக்காய் - 8
* அன்னாசிப்பூ - 1 1/2
* கிராம்பு - 8
* மராட்டி மொக்கு - 1
* பட்டை - 2 துண்டு
* கல்பாசி - சிறிது
* பிரியாணி இலை - 2
* ஜாதிக்காய் - சிறிய துண்டு
* ஜாதிபத்திரி - 2 இதழ்

பிரியாணிக்கு...

* கடலை எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* நெய் - 3 டேபிள் ஸ்பூன்
* தயிர் - 6 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1 டம்ளர் + தேவையான அளவு
* எலுமிச்சை - 1

செய்முறை:

* முதலில் சீரக சம்பா அரிசியை சமைக்க தொடங்கும் போது நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதைத் தொடர்ந்து மட்டனை கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஈரப்பதம் இல்லாத மிக்சர் ஜாரில் மிளகு, சீரகம், மல்லி, சோம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, கிராம்பு, மராட்டி மொக்கு, பட்டை, கல்பாசி, பிரியாணி இலை, ஜாதிக்காய், ஜாதிபத்திரி ஆகியவற்றை சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கடலை எண்ணெய் மற்றும் நெய் சேர்க்க வேண்டும்.
* பின் மட்டனில் கொழுப்பு இருந்தாலோ அல்லது கொழுப்பு நிறைந்த மட்டன் துண்டுகள் இருந்தாலோ, அவற்றை எண்ணெயில் சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அந்த மட்டன் துண்டுகளை எடுத்துவிட வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த வெங்காய மசாலாவை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த பொடியை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் தயிர் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் 1 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி 1 விசில் விட்டு, தீயை குறைத்து 2 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும்.
* பின் மீண்டும் அந்த குக்கரை அடுப்பில் வைத்து, அதில் ஊற வைத்த சீரக சம்பா அரிசியை சேர்த்து கிளறி, 1 கப் அரிசிக்கு 1 1/2 கப் நீர் என நீரை ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் 1 எலுமிச்சையின் சாற்றினை வடிகட்டி சேர்த்து கிளறி, குக்கரை மூடி, 1 விசில் விட்டு, 5 நிமிடம் குறைவான தீயில் வைத்து, அடுப்பை அணைத்துவிட்டு, விசில் போனதும் குக்கரைத் திறந்து பிரியாணியை கிளறினால், சுவையான சீரக சம்பா மட்டன் பிரியாணி தயார்.

குறிப்பு: 1 கப் சீரக சம்பா அரிசிக்கு 1 1/2 கப் நீரை ஊற்ற வேண்டும். எனவே எத்தனை கப் அரிசி வருகிறதோ, அதற்கேற்ப நீரை ஊற்றுங்கள்.

[ of 5 - Users]
Story first published: Sunday, October 12, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion