இட்லி, தோசை மற்றும் சாதத்துக்கு அட்டகாசமாக இருக்கும் பருப்பே இல்லாத சாம்பார் ரெசிபி..எப்படி செய்யணும் தெரியுமா

Posted By:

சாம்பார் இந்தியர்களின் பிரதான உணவுகளில் ஒன்று. விருந்து சாப்பாடு, விரத சாப்பாடு, விழா கால சாப்பாடு, திருமண சாப்பாடு என அனைத்து இடங்களிலும் சாம்பார் தனக்கென தனி இடத்தை பிடித்துவிடும். கும்பகோணம் சாம்பார், ஐயர் வீட்டு சாம்பார், அரைத்து வைத்த சாம்பார், கர்நாடக சாம்பார் என வித விதமான சாம்பார் வகைகள் இருக்கும்.

எப்படி சாம்பார் வைத்தாலும் அதில் முக்கியம் தேவைப்படும் பொருளே பருப்பு தான். ஆனால் வீட்டில் பருப்பு இல்லாத நேரத்தில் செய்ய கூடிய அவசர சாம்பார் பற்றி தெரியுமா? இங்கு பருப்பு இல்லாமல் எப்படி சாம்பார் செய்வது என பார்க்கலாம்.

Sambar Recipe How to Prepare Sambar Without Dal in Tamil

தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் - 2
முருங்கைக்காய் - 1
கேரட் - 1
பீன்ஸ் - 4
கொத்தவரங்காய் - 4
சாம்பல் பூசணி - சில துண்டுகள்
மஞ்சள் தூள் - ¼ டீ ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்
சாம்பார் தூள் - 1 ½ டீ ஸ்பூன்
தனியா தூள் - ¼ டீ ஸ்பூன்
வெங்காயம் - 1
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - ¼ டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - சிறிதளவு
கருவேப்பிலை - சிறிதளவு

அரைக்க

தேங்காய் - ½ மூடி
பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 5 பல்
புளி - நெல்லிக்காய் அளவு

செய்முறை:

- தேங்காயை துருவியோ அல்லது நறுக்கியோ எடுத்துக் கொள்ளவும்.
- வெங்காயத்தை தோல் நீக்கி நறுக்கி கொள்ளவும்.(அரைப்பதற்கு ஏற்ப)
- நன்றாக பழுத்த தக்காளியை 4 துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- பின் தேங்காய், பொட்டுக்கடலை, வெங்காயம், தக்காளி, புளி, மற்றும் தோல் நீக்கிய பூண்டு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
- முருங்கை காய், கத்திரிக்காய், கேரட், பீன்ஸ், கொத்தவரங்காய், மற்றும் பூசணி காயை உங்களுக்கு விருப்பமான அளவில் நறுக்கி வைத்து கொள்ளவும்.
- வெங்காயத்தை தோல் நீக்கி நீள வாக்கில் நறுக்கி கொள்ளவும்.
- குக்கரை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து காய விடவும்.
- எண்ணெய் காய்ந்ததும் வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
- பின் அதனுடன் நறுக்கி வைத்த காய்கறிகளை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- அதில் சிறிதளவு மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், மற்றும் சாம்பார் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.
- அரைத்து வைத்த தேங்காய் கலவையை இதனுடன் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- பின் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குக்கரை மூடி 3 விசில் விடவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விடவும்.
- பின் அதனுடன் கருவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து அதை சாம்பாரில் சேர்த்து கிளறினால், சுவையான பருப்பில்லாத சாம்பார் ரெடி!

[ of 5 - Users]
Story first published: Thursday, October 3, 2024, 19:03 [IST]
Desktop Bottom Promotion