சுடசுட இட்லிக்கு சைதாபேட்டை வடகறியை செஞ்சு சாப்பிடுங்க.. சும்மா அள்ளும்...

Posted By:

Saidapet Vadacurry Recipe In Tamil: எப்போதும் இட்லிக்கு சட்னி, சாம்பார், குருமா என்று செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஸ்பெஷலாக செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் சைதாபேட்டை வடகறியை செய்யுங்கள். இந்த வடகறி இட்லிக்கு மட்டுமின்றி, தோசை, பூரி போன்றவற்றுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

இந்த சைதாபேட்டை வடகறியை செய்வது மிகவும் சுலபம். குறிப்பாக விடுமுறை நாட்களில் ஸ்பெஷலாக சமைக்க நினைத்தால், இந்த வடகறியை செய்யலாம். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

Saidapet Vadacurry: How To Make A Saidapet Vadacurry Recipe

உங்களுக்கு சைதாபேட்டை வடகறி ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சைதாபேட்டை வடகறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வடைக்கு...

* கடலைப் பருப்பு - 1 கப்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

கறிக்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 3
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* பச்சை மிளகாய் - 2
* இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
* பெரிய தக்காளி - 1
* கொத்தமல்லி - சிறிது
* காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 லிட்டர்
* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் கடலைப் பருப்பை நீரில் 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் கடலைப் பருப்பு, சோம்பு, வரமிளகாய், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்து வைத்துள்ளதை வடைகளாக பொரித்து எடுக்க வேண்டும்.
* பிறகு பொரித்து வைத்துள்ள வடைகளை கைகளால் உதிர்த்து விட விட வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கியதும், தக்காளி மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, சீரகத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு 1 நிமிடம் கிளறி விட்டு, 1 லிட்டர் நீரை ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து பச்சை வாசனை போக மூடி வைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக மூடியைத் திறந்து, உதிர்த்து வைத்துள்ள வடையை சேர்த்து நன்கு கிளறி, ஒரு கொதி விட்டு இறக்கினால், சுவையான சைதாபேட்டை வடகறி தயார்.

Image Courtesy: Cooking From Heart

[ of 5 - Users]
Story first published: Saturday, February 3, 2024, 7:50 [IST]
Desktop Bottom Promotion