ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..

Posted By:

Rottukadai Thakkali Sambar Recipe In Tamil: இட்லிக்கு எப்பவும் ஒரே மாதிரி சட்னி, சாம்பார் செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் சைடு டிஷ் எதிர்பார்க்கிறீர்களா? அப்படியானால் ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பாரை ஒருமுறை செய்யுங்கள். இந்த தக்காளி சாம்பாருக்கு பருப்பு எதுவும் தேவையில்லை. தக்காளியை வேக வைத்து அரைத்து சாம்பார் செய்யும் போது, அதன் சுவை வேற லெவலில் இருக்கும். முக்கியமாக இந்த சாம்பாரை ஒருமுறை செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்து கொடுக்க சொல்லி கேட்பார்கள்.

Rottukadai Tomato Sambar How To Make Rottukadai Thakkali Sambar Recipe

உங்களுக்கு இந்த ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வேக வைத்து அரைப்பதற்கு...

* தக்காளி - 3 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 5
* சாம்பார் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1/2 டம்ளர்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (மெல்லியதாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* அரைத்த தக்காளி
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* பொட்டுக்கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் குக்கரில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, அத்துடன் பச்சை மிளகாய், சாம்பார் தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் 1/2 டம்ளர் நீரை ஊற்றி குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, தக்காளியை குளிர வைத்து, மிக்சர் ஜாரில் சேர்த்து, லேசாக ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வெங்காயம் வரும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த தக்காளியை சேர்த்து, சாம்பாருக்கு தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு அதில் பொட்டுக்கடலை மாவை நீரில் கரைத்து ஊற்றி கிளறி, 10 நிமிடம் கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, August 14, 2026, 20:59 [IST]
Desktop Bottom Promotion