ரோட்டுக்கடை சப்பாத்தி குருமா - ஈஸியா 10 நிமிஷத்துல எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..

Posted By:

Rottukadai Chapathi Kurma Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு சிம்பிளா ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? இருந்தாலும் 10 நிமிடத்தில் ஒரு சூப்பரான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் ரோட்டுக்கடை ப்ளைன் குருமாவை செய்யுங்கள்.

இந்த குருமா செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். அதுவும் இந்த குருமா சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக சப்பாத்திக்கு இந்த குருமாவை செய்தால், வீட்டில் உள்ளவர்கள் வழக்கமாக சாப்பிடுவதை விட 2 சப்பாத்தி அதிகமாக சாப்பிடுவார்கள்.

Rottukadai Chapathi Kurma How To Make a Simple Kurma Recipe

உங்களுக்கு ரோட்டுக்கடை சப்பாத்தி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரோட்டுக்கடை சப்பாத்தி குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு...

* இஞ்சி - 3 இன்ச்
* பூண்டு - 10 பல்
* பச்சை மிளகாய் - 4
* புதினா - சிறிது
* சின்ன வெங்காயம் - 25
* தக்காளி - 1 (நறுக்கியது)
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சிறிய தேங்காய் - பாதி மூடி

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* பட்டை - 1 இன்ச்
* கிராம்பு - 5
* கல்பாசி - சிறிது
* பிரியாணி இலை - 1
* சிறிய அளவிலான வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* சிறிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், புதினா, சின்ன வெங்காயம், தக்காளி, சோம்பு, தேங்காய் சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, கல்பாசி, பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் சிறிய அளவிலான வெங்காயத்தை எடுத்து பொடியாக நறுக்கி சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து குறைவான தீயில் வைத்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 10 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான ரோட்டுக்கடை சப்பாத்தி குருமா தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, July 25, 2025, 20:30 [IST]
Desktop Bottom Promotion