1/4 கப் ரவையும், 2 கப் பாலும் இருந்தா.. குளுகுளுன்னு இந்த ஸ்வீட்டை செஞ்சு சாப்பிடுங்க..

Posted By:

Rava Rasgulla Recipe In Tamil: கோடை விடுமுறையில் குழந்தைகள் வீட்டில் இருப்பதால், நிச்சயம் எந்நேரமும் சாப்பிட ஏதாவது கேட்பார்கள். அப்போது வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு பலவிதமான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால், விரும்பி சாப்பிடுவார்கள் அல்லவா? அதுவும் உங்கள் பிள்ளைகள் ஸ்வீட் பிரியர்கள் என்றால், நிச்சயம் அவர்கள் அடிக்கடி ஸ்வீட் கேட்பார்கள்.

அதுவும் உங்கள் பிள்ளைகளுக்கு ரசகுலா பிடிக்குமானால், அதை வெறும் ரவையும், பாலையும் வைத்து செய்யலாம் என்பது தெரியுமா? முக்கியமாக இப்படி ரவை கொண்டு செய்யப்படும் ரசகுலாவை ஒருமுறை செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள். அந்த அளவில் ருசியாக இருக்கும்.

Rava Rasgulla How To Make a Rava Rasgulla Recipe

உங்களுக்கு ரவா ரசகுலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா ரசகுலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* நெய் - 1 டீஸ்பூன்
* ரவை - 1/4 கப் அல்லது 50 கிராம்
* காய்ச்சி ஆறிய கெட்டிப் பால் - 2 கப்
* சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்

உள்ளே வைப்பதற்கு...

* நெய் - 1 டீஸ்பூன்
* தேங்காய் - 1 பெரிய மூடி (அரைத்தது)
* பொடித்த வெல்லம் - 2 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
* பாதாம் - 5 (பொடியாக நறுக்கியது)
* முந்திரி - 5 (பொடியாக நறுக்கியது)

சர்க்கரை பாகுவிற்கு...

* சர்க்கரை - 1 கப்
* தண்ணீர் - 2 கப்
* குங்குமப்பூ - 1 சிட்டிகை

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், ரவையை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் காய்ச்சிய ஆறிய கெட்டிப் பாலை ஊற்றி நன்கு கிளறி ரவையை பாலில் வேக வைக்க வேண்டும்.
* கலவையானது சற்று கெட்டியாகத் தொடங்கியதும், அதில் 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து கிளறி விட்டு, சர்க்கரை கரைந்ததும், அடுப்பை அணைத்து விட்டு மூடி வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், அரைத்த தேங்காயை சேர்த்து, தேங்காயில் உள்ள நீர் வற்றும் வரை நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடித்த வெல்லம் மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரியை சேர்த்து கிளறி இறக்கி சற்று குளிர வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் 1 கப் சர்க்கரையை சேர்த்து அடுப்பில் வைத்து, அத்துடன் 2 கப் நீரை ஊற்றி, சர்க்கரையை கரைய வைக்க வேண்டும்.
* சர்க்கரை கரைந்ததும், அதில் 1 சிட்டிகை குங்குமப்பூவை சேர்த்து கிளறி அடுப்பை அணைத்துவிட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து வதக்கி வைத்துள்ள தேங்காய் கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் பாலில் வேக வைத்த ரவையை கைகளால் நன்கு விரிசல் இல்லாதவாறு மென்மையாக பிசைந்து, கொஞ்சம் எடுத்து உருட்டி, தட்டையாக தட்டி நடுவே தேங்காய் உருண்டையை வைத்து மூடி, விரிசல் இல்லாதவாறு உருட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் அதை சர்க்கரை பாகுவில் சேர்க்க வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் உருட்டி, சர்க்கரை பாகுவில் போட்டு, பின் அதை ஃப்ரிட்ஜ்ஜில் குறைந்தது 1 மணிநேரம் ஊற வைத்து, பின் பரிமாறினால், சுவையான குளுகுளு ரவா ரசகுலா தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, May 9, 2025, 18:12 [IST]
Desktop Bottom Promotion