1 கப் ராகி மாவும், 1 கைப்பிடி முருங்கைக்கீரையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க...

Posted By:

Ragi Murungaikeerai Adai Recipe: காலையில் என்ன டிபன் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? எப்போதும் இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? சற்று ஆரோக்கியமான, அதே சமயம் சுவையான ஒரு காலை டிபனை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் ராகி மாவும், அவலும் உள்ளதா? அத்துடன் முருங்கைக்கீரையும் உள்ளதா?

அப்படியானால் காலையில் இவற்றைக் கொண்டு அசத்தலான சுவையில் அடை செய்யுங்கள். இந்த அடையை கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் செய்யும் போது, நீண்ட நேரம் மென்மையாக இருக்கும். மேலும் இந்த அடை செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, விரும்பி சாப்பிடுமாறும் இருக்கும். முக்கியமாக இந்த அடைதேங்காய் சட்னி, தக்காளி சட்னியுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

Ragi Murungaikeerai Adai How To Make a Ragi Murungaikeerai Adai Recipe

உங்களுக்கு ராகி முருங்கைக்கீரை அடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி முருங்கைக்கீரை அடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* அவல் - 1/2 கப்
* ராகு மாவு - 1 கப்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* முருங்கைக்கீரை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
* வாழை இலை
* எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 1/2 கப் அவலை எடுத்து, நீரில் 2 முறை அலசிக் கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது நீரைத் தெளித்து மூடி வைத்து 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து, அவலை கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* அதன் பின் அதில் 1 கப் ராகி மாவை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பின் அதில் துருவிய கேரட்டை சேர்த்து, அத்துடன் 1 கைப்பிடி முருங்கைக்கீரையை சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் சுவைக்கேற்ப உப்பு தூவி கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நீரைத் தெளித்து, மென்மையான அடை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாழை இலையை எடுத்து, அதில் சிறிது எண்ணெய் தடவி, பிசைந்து வைத்துள்ள மாவை சிறிது எடுத்து நடுவே வைத்து, தட்டையாக அடை போன்று தட்டிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தட்டி வைத்துள்ள அடையைப் போட்டு எண்ணெய் ஊற்றி, 10 நிமிடம் மூடி வைத்து, முன்னும் பின்னும் வேக வைத்துக் எடுத்துக் கொண்டால், சுவையான ராகி முருங்கைக்கீரை அடை தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, March 19, 2025, 7:00 [IST]
Desktop Bottom Promotion