1 கப் ராகி மாவு இருந்தா போதும்.. சத்தான மற்றும் சுவையான அடையை செய்யலாம்.. ட்ரை பண்ணி பாருங்க..

Posted By:

Ragi Kaara Adai Recipe In Tamil: தினமும் காலையில் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்து விட்டதா? சற்று வித்தியாசமாக, அதே சமயம் சத்தான ஒரு காலை உணவை சாப்பிட நினைக்கிறீர்களா? முக்கியமாக செய்வதற்கு சுலபமாக இருக்க வேண்டுமா? அப்படியானால் உங்கள் வீட்டில் ராகி மாவு உள்ளதா?

அந்த ராகி மாவைக் கொண்டு கார அடையை செய்யுங்கள். இந்த கார அடை ஒரு நல்ல காலை உணவாக இருப்பதோடு, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். அதுவும் இந்த கார அடையை ஒருவர் அப்படியே சாப்பிடலாம் அல்லது தக்காளி சட்னி, தேங்காய் சட்னி ஆகியவற்றுடனும் சேர்த்து சாப்பிடலாம்.

Ragi Kaara Adai Recipe

வாரம் ஒருமுறை ராசியை உணவில் சேர்த்து வந்தால், உடல் வலிமையாக இருக்கும். உங்களுக்கு ராகி கார அடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி கார அடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* ராகி மாவு - 1 கப்
* சின்ன வெங்காயம் - 10-12
* தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக துண்டுகளாக்கப்பட்டது)
* வறுத்த வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன் (லேசாக பொடித்துக் கொள்ளவும்)
* பச்சை மிளகாய் - 1
* வறுத்த எள்ளு - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* சுடுநீர் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய், லேசாக பொடித்த வேர்க்கடலை, எள்ளு விதைகள், சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது சிறிதாக சுடுநீரை சேர்த்து நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு பிசைந்த மாவை 2-3 உருண்டைகளாக பிரித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும்.
* தோசைக்கல் சூடாவதற்குள், ஒரு கவர் அல்லது வாழை இலையை எடுத்து, அதில் எண்ணெயைத் தடவி, பின் கைகளை நீரில் நனைத்து ஒரு உருண்டையை எடுத்து அதன் மேல் வைத்து தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து தட்டி வைத்துள்ள ராகி அடையை தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் ஊற்றி 2 நிமிடம் குறைவான தீயில் வைத்து ஒரு பக்கத்தை வேக வைக்க வேண்டும். பின் அடையைத் திருப்பிப் போட்டு, மீண்டும் எண்ணெய் ஊற்றி, 2 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும்.
* இதேப் போல் அனைத்து உருண்டைகளையும் செய்தால், சுவையான ராகி கார அடை தயார்.

குறிப்பு:

* ராகி அடைக்கு மாவை பிசையும் போது சுடுநீரைப் பயன்படுத்தினால், அடை சற்று மென்மையாக இருக்கும்.
* விருப்பமுள்ளவர்கள், இந்த அடையுடன் துருவிய கேரட், பீட்ரூட் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
* வேண்டுமானால், ராகி மாவிற்கு பதிலாக, கோதுமை மாவு, அரிசி மாவு ஆகியவற்றையும் பயன்படுத்தி அடையை தயாரிக்கலாம்.

Image Courtesy: naliniscooking

[ of 5 - Users]
Story first published: Monday, December 18, 2023, 7:21 [IST]
Desktop Bottom Promotion