ராகி இட்லியும், வெங்காய கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சுவையானதும், சத்தானதும் கூட

Posted By:

Ragi Idli With Vengaya Kara Chutney Recipe In Tamil: ராகி உடலுக்கு மிகவும் நல்லது. முக்கியமாக எலும்புகளுக்கு மிகவும் நல்லது. வளரும் குழந்தைகள், எலும்பு தொடர்பான பிரச்சனைகளை கொண்டவர்கள் ராகியை உணவில் அதிகம் சேர்ப்பது மிகவும் நல்லது. பொதுவாக ராகியைக் கொண்டு கஞ்சி, புட்டு, உப்புமா என்று தான் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் இந்த ராகியைக் கொண்டு இட்லி, தோசையும் செய்து சாப்பிடலாம். உங்கள் வீட்டில் அடிக்கடி இட்லி, தோசை தான் டிபனாக இருக்குமானால், ஒருமுறை ராகி இட்லியை முயற்சித்துப் பாருங்கள். இந்த இட்லிக்கு வெங்காய கார சட்னி அருமையான காம்பினேஷனாக இருக்கும்.

Ragi Idli With Vengaya Kara Chutney How To Make This Healthy Breakfast Recipe

உங்களுக்கு இந்த ராகி இட்வி மற்றும் வெங்காய கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி இட்லி மற்றும் வெங்காய கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* ராசி - 1 1/2 கப்
* இட்லி அரிசி - 1 கப்
* உளுத்தம் பருப்பு - 1/2 கப்
* சிவப்பு அவல் - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு

வெங்காய கார சட்னிக்கு...

அரைப்பதற்கு...

* பெரிய வெங்காயம் - 1
* புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
* வரமிளகாய் - 8 (நீரில் ஊற வைத்தது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 1/2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* அரைத்த சட்னி

செய்முறை:

* முதலில் ராகி மற்றும் இட்லி அரிசியை நீரில் 2-3 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் நீரை ஊற்றி 4-5 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதேப் போல் உளுத்தம் பருப்பு மற்றும் அவலை தனித்தனியாக நீரில் கழுவி, சுத்தமான நீரை ஊற்றி, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு கிரைண்டரில் ஊற வைத்த உளுத்தம் பருப்பை சேர்த்து, 20 நிமிடம் நன்கு அரைக்க வேண்டும்.
* பிறகு அதே கிரைண்டரில் ஊற வைத்த ராகி, அரிசி மற்றும் அவலை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அரைத்த மாவை அரைத்த உளுத்தம் பருப்பு மாவுடன் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கையால் கலந்து விட வேண்டும்.
* அதன் பின் அந்த மாவை 9 மணிநேரம் புளிக்க வைக்க வேண்டும்.
* மாவு புளித்த பின், அந்த மாவை நன்கு கிளறி, இட்லி தட்டில் இட்லிகளாக ஊற்றி, 5-8 நிமிடம் வேக வைத்து எடுத்தால், ராகி இட்லி தயார். இதே மாவைக் கொண்டு தோசையும் சுடலாம்.
* அடுத்து சட்னி செய்வதற்கு மிக்சர் ஜாரில் நறுக்கிய 1 பெரிய வெங்காயம், ஊற வைத்த வரமிளகாய், புளி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த சட்னியை சேர்த்து, 5 நிமிடம் வதக்கி வேக வைத்து இறக்கினால், வெங்காய கார சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, September 12, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion