மொறுமொறு ராகி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..

Posted By:

Ragi Dosa With Thakkali Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் என்ன டிபன் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? வீட்டில் இட்லி, தோசை மாவு எதுவும் இல்லையா? வீட்டில் ராகி மாவு உள்ளதா? அப்படியானால் அந்த ராகி மாவைக் கொண்டு மொறுமொறுப்பான ராகி தோசையையும், அதற்கு சைடு டிஷ்ஷாக தக்காளி சட்னியையும் செய்யுங்கள். இந்த டிபன் காம்போ நிச்சயம் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

Ragi Dosa With Thakkali Chutney How To Make This Healthy Breakfast Recipe

உங்களுக்கு இந்த ராகி தோசையும், தக்காளி சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி தோசை மற்றும் தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

ராகி தோசைக்கு...

* ராகி மாவு - 1 கப்
* அரிசி மாவு - 1/4 கப்
* ரவை - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* சீரகம் - 1/2
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

தக்காளி சட்னிக்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 3
* தக்காளி - 2
* வரமிளகாய் - 5
* காஷ்மீரி வரமிளகாய் - 3
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, அரிசி மாவு, ரவை, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி கட்டிகளின்றி கலந்து, பின் தோசை மாவு பதத்திற்கு நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதற்குள் சட்னி செய்யலாம். அதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பை சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்கு வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, வரமிளகாய், காஷ்மீரி வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வெங்காயமும், தக்காளியும் வதங்கும் வரை வதக்க வேண்டும்.
* வெங்காயம் தக்காளி வதங்கியதும், அதை இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சட்னி தாளிக்க எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த சட்னியை ஊற்றி கிளறி இறக்கினால், சுவையான தக்காளி கடலைப்பருப்பு சட்னி தயார்.
* இப்போது ஊற வைத்த ராகி மாவை கிளறினால், மாவு சற்று கெட்டியாகியிருக்கும். இந்நிலையில் அதில் சீரகம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு கலந்து, ரவா தோசை பதத்திற்கு தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் ரவா தோசை சுடுவது போன்று, மாவை அள்ளி ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் வைத்து, மொறுமொறுவென்று வந்ததும் எடுத்தால், சுவையான மற்றும் மொறுமொறுப்பான ராகி தோசை தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, July 4, 2026, 7:25 [IST]
Desktop Bottom Promotion