புளிச்சக்கீரை வாங்குனா இப்படி கிராமத்து ஸ்டைலில் கடைஞ்சு சாப்பிடுங்க.. 10 நாளானாலும் கெட்டுப் போகாது...

Posted By:

Pulicha Keerai Kadayal Recipe In Tamil: உங்கள் வீட்டில் புளிச்சக்கீரை இருக்கா? அந்த கீரையை எப்படி செய்வதென்று தெரியவில்லையா? அப்படியானால் புளிச்சக்கீரையை கடைந்து சாப்பிடுங்கள். அதுவும் அந்த புளிச்சக்கீரையை கிராமத்து ஸ்டைலில் கடையும் போது, அது சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

முக்கியமாக இப்படி புளிச்சக்கீரையை கடைந்தால், அதை 10 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். குறிப்பாக இப்படி புளிச்சக்கீரையை செய்தால், கீரை பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Pulicha Keerai Kadayal How To Make a Gongura Kadayal Recipe

உங்களுக்கு கிராமத்து ஸ்டைலில் புளிச்சக்கீரை கடையலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புளிச்சக்கீரை கடையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வறுத்து பொடி செய்வதற்கு...

* வெந்தயம் - 1
* கடுகு - 1

வதக்குவதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 6-7 பல்
* வரமிளகாய் - 6-10 (காரத்திற்கு ஏற்ப)
* புளிச்சக்கீரை - 1/2 கிலோ (சுத்தம் செய்தது)
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
* பச்சை மிளகாய் - 2
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் புளிச்சக்கீரையை சுத்தம் செய்து, அதன் இலைகளை மட்டும் நீரில் கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெந்தயம் மற்றும் கடுகை சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்கி ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே எண்ணெயில் வரமிளகாயை காரத்திற்கு ஏற்ப சேர்த்து நிறம் மாற வறுத்து, அதையும் தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் புளிச்சக்கீரையை சேர்த்து , அத்துடன் புளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கீரை சுருங்கும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூளை சேர்த்து, 1 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் நன்கு கீரையை வேக வைத்து இறக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த கடுகு, வெந்தயத்தை சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து சற்று கொரகொரவென்று அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* ப்ன்னர் அம்மி அல்லது மத்து கொண்டு நன்கு மசித்து விட வேண்டும்.
* பின் அதில் அரைத்த மிளகாய் விழுதை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி சற்று கொரகொரவென்று அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, அரைத்த புளிச்சக்கீரையை சேர்த்து கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறினால், சுவையான கிராமத்து ஸ்டைல் புளிச்சக்கீரை கடையல் தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, June 17, 2025, 14:47 [IST]
Desktop Bottom Promotion