1 கப் இட்லி மாவும், 1/2 கப் பொட்டுக்கடலையும் சேர்த்து சுடசுட இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. தட்டுல ஒன்னு மிஞ்சாது

Posted By:

Pottukadalai Susiyam Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் பிள்ளைகள் வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க கேட்கிறார்களா? அதுவும் ஸ்வீட் ஏதாவது செய்ய சொல்கிறார்களா? அப்படியானால் வீட்டில் இட்லி மாவும், பொட்டுக்கடலையும் இருந்தால், அருமையான சுசியம் செய்யுங்கள். இது 15 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு சுலபமாக இருக்கும்.

முக்கியமாக இது பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு அட்டகாசமாக இருக்கும். வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால் அவர்களுக்கு இந்த ஸ்வீட்டை செய்து கொடுத்தால், நீங்கள் பாராட்டு மழையில் நனையலாம். அந்த அளவில் சுவையாக இருக்கும்.

Pottukadalai Susiyam How To Make a Pottukadalai Susiyam Recipe

உங்களுக்கு இந்த பொட்டுக்கடலை சுசியத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொட்டுக்கடலை சுசியம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பொட்டுக்கடலை - 1/2 கப்
* தேங்காய் - 1/4 மூடி
* வெல்லம் - 1 1/2 கப்
* தண்ணீர் - 1/4 கப்
* நெய் - 1/2 டீஸ்பூன்
* இட்லி மாவு - 1 கப்
* அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் பொட்டுக்கடலையைப் போட்டு நன்கு பொடித்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே ஜாரில் 1/4 மூடி தேங்காயை பொடியாக நறுக்கி போட்டு, அதையும் நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 கப் வெல்லத்தைப் போட்டு, 1/4 கப் நீரை ஊற்றி, வெல்லத்தை கரைக்க வேண்டும். வெல்லம் கரைந்ததும், அதை வடிகட்டி தனியாக ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் 1/2 டீஸ்பூன் நெய்யை சேர்த்து உருகியதும், அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ள பொட்டுக்கடலையை சேர்த்து நன்கு 3-4 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின் அதில் வெல்லம் கரைத்த நீரை ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
* கலவையானது வாணலியில் ஒட்டாமல் நன்கு சுருண்டு வந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு குளிர வைக்க வேண்டும்.
* கை பொறுக்கும் சூட்டிற்கு ஆறியதும், அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் 1 கப் இட்லி மாவை எடுத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து, இட்லி மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான பொட்டுக்கடலை சுசியம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, February 8, 2025, 16:01 [IST]
Desktop Bottom Promotion