1 கைப்பிடி பொட்டுக்கடலையும், 5 தக்காளியும் இருந்தா.. 10 நிமிடத்தில் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்...

Posted By:

Pottukadalai Kurma Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் இட்லி, தோசை தான் காலை உணவாக இருக்குமா? அந்த இட்லி, தோசைக்கு எப்போதும் சட்னி, சாம்பார் தான் சைடு டிஷ்ஷாக செய்வீர்களா? சற்று வித்தியாசமான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா?

அப்படியானால் உங்கள் வீட்டில் 1 கைப்பிடி பொட்டுக்கடலையும், 5 தக்காளியும் இருந்தால், அவற்றைக் கொண்டு அருமையான சுவையில் குருமா செய்யுங்கள். இந்த பொட்டுக்கடலை குருமா 10 நிமிடத்தில் டக்கென்று செய்யக்கூடியவாறு இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். இந்த குருமாவை செய்யும் போது வீட்டில் உள்ளோர் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.

Pottukadalai Kurma How To Make a Pottukadalai Kuruma

உங்களுக்கு பொட்டுக்கடலை குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொட்டுக்கடலை குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 2 (கீறியது)
* பூண்டு - 10 பல் (தட்டியது)
* தக்காளி - 5 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 300 மிலி
* கொத்தமல்லி - சிறிது

பொடிப்பதற்கு...

* பொட்டுக்கடலை - 1 கைப்பிடி
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
* தண்ணீர் - 200 மிலி

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து பொரிய விட வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பச்சை மிளகாயை கீறி சேர்த்து நன்கு நிறம் மாற வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தட்டி வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் 300 மிலி நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து மிதமான தீயில் வைத்து, 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் பொட்டுக்கடலை, சீரகம், வரமிளகாய் சேர்த்து நன்கு மென்மையாக பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு கிண்ணத்தில் பொடித்த பொட்டுக்கடலை பொடியை போட்டு, அதில் 200 மிலி நீரை ஊற்றி கட்டிகளின்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக அந்த பொடியை கொதித்துக் கொண்டிருக்கும் குருமாவுடன் சேர்த்து கிளறி, 3-4 நிமிடம் நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான பொட்டுக்கடலை குருமா தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, January 3, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion