உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் வெச்சு.. ஒருவாட்டி இப்படி குழம்பு செய்யுங்க.. 3 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்..

Posted By:

Potato Peanut Kara Kuzhambu Recipe In Tamil: எப்பவும் ஒரே மாதிரியான குழம்பை செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் ஒரு கார குழம்பு செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் வேர்க்கடலையும், உருளைக்கிழங்கும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு ஒரு கார குழம்பு செய்யுங்கள்.

Potato Peanut Kara Kuzhambu How To Make Urulai Kizhangu Verkadalai Kara Kuzhambu Recipe

இந்த குழம்பு சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தி, இட்லி, தோசையுடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது ஒரு வித்தியாசமான சுவையில் இருப்பதால், வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிடுவார்கள். அதுமட்டுமின்றி, இந்த குழம்பை நன்கு கொதிக்க வைத்தால், 3 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.

இந்த உருளைக்கிழங்கு வேர்க்கடலை கார குழம்பு ரெசிபி குறித்து கோமதீஸ் கிச்சன் என்னும் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த உருளைக்கிழங்கு வேர்க்கடலை கார குழம்பு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு வேர்க்கடலை கார குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* வேர்க்கடலை - 1 கப்
* உருளைக்கிழங்கு - 2
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* தாளிப்பு வடகம் - சிறிது
* சின்ன வெங்காயம் - 10 (நறுக்கியது)
* பூண்டு - 10 பல் (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன தக்காளி - 2 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* சாம்பார் தூள் - 3 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* புளி - 1 எலுமிச்சை அளவு (2 கப் நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.)
* தேங்காய் விழுது
* வெல்லம் - சிறிய துண்டு

தேங்காய் விழுது அரைப்பதற்கு...

* துருவிய தேங்காய் - 1/2 கப்
* கறிவேப்பிலை - சிறிது
* சின்ன வெங்காயம் - 1

செய்முறை:

* முதலில் வேர்க்கடலையை நீரில் 8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் குக்கரில் ஊற வைத்த வேர்க்கடலையை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் ஒரு பெரிய உருளைக்கிழங்கை இரு துண்டுகளாக்கி சேர்த்து, குக்கரை மூடி மீண்டும் அடுப்பில் வைத்து, 1 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, உருளைக்கிழங்கை ஓரளவு பெரிய துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். அதேப் போல் வேர்க்கடலையையும் நீரை வடிகட்டிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம், தாளிப்பு வடகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு பற்கள், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு, சாம்பார் தூள், மிளகாய் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.
* பின்னர் அதில் வேக வைத்த உருளைக்கிழங்கு மற்றும் வேர்க்கடலையை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் 2 1/2 கப் நீரில் ஊற வைத்து புளிச்சாற்றினை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த விழுதை குழம்புடன் சேர்த்து, ஜாரில் சிறிது நீரை ஊற்றி அலசி குழம்புடன் சேர்த்து நன்கு கிளறி, சிறிய துண்டு வெல்லத்தை சேர்த்து நன்கு கலந்து, மிதமான தீயில் 10 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* ஒருவேளை குழம்பை 3 நாட்கள் வரை வைத்து சாப்பிட நினைத்தால், இன்னும் 5-6 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான உருளைக்கிழங்கு வேர்க்கடலை குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, May 29, 2026, 15:02 [IST]
Desktop Bottom Promotion