பூரிக்கு இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 பூரி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..

Posted By:

Potato Masala Recipe In Tamil: உங்கள் வீட்டில் பூரி எப்போது செய்தாலும், அதற்கு உருளைக்கிழங்கு தான் சைடு டிஷ்ஷாக செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே சுவையில் தான் உருளைக்கிழங்கு மசாலாவை செய்வீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் உருளைக்கிழங்கு மசாலாவை செய்ய நினைக்கிறீர்களா?

அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது. ஏனெனில் இங்கு வழக்கமாக செய்யும் உருளைக்கிழங்கு மசாலாவிற்கு பதிலாக வேறு விதத்தில் எப்படி உருளைக்கிழங்கு மசாலா செய்யலாம் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி உருளைக்கிழங்கு மசாலாவை செய்யும் போது வீட்டில் உள்ளோர் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.

Potato Masala How To Make a Potato Masala For Poori

உங்களுக்கு உருளைக்கிழங்கு மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு...

* உருளைக்கிழங்கு - 4
* தண்ணீர் - தேவையான அளவு

அரைப்பதற்கு...

* மல்லி - 2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 2
* பிரியாணி இலை - 1
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/4 கப் + 2 கப்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* கசூரி மெத்தி - சிறிது
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் குக்கரில் உருளைக்கிழங்குகளை போட்டு, கிழங்கு மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, உருளைக்கிழங்குகளை வெளியே எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு, கைகளால் லேசாக மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் மல்லி, சோம்பு, சீரகம், மிளகு சேர்த்து பொடித்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், தக்காளியை சேர்த்து நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், உப்பு, மாங்காய் தூள், அரைத்த பொடியை சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் 1/4 கப் நீரை ஊற்றி, பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 2 கப் நீரை ஊற்றி கிளறி மூடி வைத்து, 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதில் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி, மூடி வைத்து மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் கரம் மசாலாவை சேர்த்து கிளறி மூடி வைத்து 10 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் கைகளால் நசுக்கிய கசூரி மெத்தி மற்றும் கொத்தமல்லியை தூவி கிளறி இறக்கினால், சுவையான உருளைக்கிழங்கு மசாலா தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, September 19, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion