பூஜைக்கு வாங்குன பொரி இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க... செம டேஸ்ட்டா இருக்கும்...

Posted By:

Pori Idli Recipe In Tamil: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைக்கு வாங்குன பொரி அதிகம் உள்ளதா? அந்த பொரியை எப்படி காலி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கு மசாலா பொரி செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் அந்த பொரியைக் கொண்டு அற்புதமான டிபனை செய்து சாப்பிடுங்கள்.

அதுவும் 2 கப் பொரியும், 1 கப் ரவையும் இருந்தால், பஞ்சு போன்ற மென்மையான இட்லியை செய்து சாப்பிடலாம். இந்த பொரி இட்லி வழக்கமாக சாப்பிடும் இட்லியின் சுவையை விட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது பஞ்சு போன்று மென்மையாக இருக்கும். இந்த இட்லிக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என்று அனைத்துவிதமான சட்னியும் பொருத்தமாக இருக்கும்.

Pori Idly How To Make a Pori Idli Recipe

உங்களுக்கு பொரி இட்லியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொரி இட்லி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பொரி - 2 கப்
* ரவை - 1 கப்
* புளிப்பில்லாத தயிர் - 1 கப்
* தண்ணீர் - 1/2 கப் + 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சமையல் சோடா - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு கிண்ணத்தில் 2 கப் பொரியை எடுத்து, அதில் தேவையான அளவு நீரை சேர்த்து, 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து, நீரில் இருந்து பொரியை எடுத்து, மிக்சர் ஜாரில் போட்டு, 1/2 கப் நீரை எடுத்து ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்ததை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ரவையை சேர்த்து, மிதமான தீயில் வைத்து 2-3 நிமிடம் நன்கு வறுத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பிறகு அந்த ரவையை அரைத்த பொரியுடன் சேர்த்து, அத்துடன் தயிரையும் சேர்த்து, 1/2 கப் நீரை ஊற்றி நன்கு கட்டிகளின்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து, 10 நிமிடம் மூடி வைத்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நீரை ஊற்றி நன்கு கலந்து, சமையல் சோடாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு இட்லி தட்டை எடுத்து, அதன் குழிகளில் எண்ணெய் தடவி, கலந்து வைத்துள்ள மாவை இட்லிகளாக ஊற்ற வேண்டும்.
* பின் இட்லி பாத்திரத்தில் இட்லி தட்டை வைத்து, 10 நிமிடம் வேக வைத்து எடுத்தால், பஞ்சு போன்ற பொரி இட்லி தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, October 2, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion