வீட்டுல 1 உருளைக்கிழங்கு தான் இருக்கா? அப்ப இப்படி பாண்டிச்சேரி ஸ்டைலில் குருமா செய்யுங்க..

Posted By:

Pondicherry Special Potato Kurma Recipe: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி, பூரி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? வீட்டில் உருளைக்கிழங்கு உள்ளதா?

அப்படியானால் அந்த உருளைக்கிழங்கைக் கொண்டு பாண்டிச்சேரி ஸ்டைலில் குருமாவை செய்யுங்கள். இந்த பாண்டிச்சேரி உருளைக்கிழங்கு குருமா சப்பாத்தி, பூரியுடன் மட்டுமின்றி, இட்லி, தோசையுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். முக்கியமாக இது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

Pondicherry Special Potato Kurma Recipe

உங்களுக்கு பாண்டிச்சேரி ஸ்டைலில் உருளைக்கிழங்கு குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாண்டிச்சேரி ஸ்டைல் உருளைக்கிழங்கு குருமாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* உருளைக்கிழங்கு - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3-4
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு..

* கிராம்பு - 3
* பட்டை - 1 இன்ச்
* பிரியாணி இலை - 1

அரைப்பதற்கு...

* துருவிய தேங்காய் - 1/4 கப்
* கசகசா - 1/2 டீஸ்பூன்
* முந்திரி - 4

பொடி செய்வதற்கு...

* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் சோம்பு மற்றும் சீரகத்தைப் போட்டு நன்கு அரைத்து பொடி செய்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே மிக்சர் ஜாரில் தேங்காய், முந்திரி, கசகசா ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கிராம்பு, பட்டை, பிரியாணி இலை சேர்த்து தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து துண்டுகளாக்கப்பட்ட உருளைக்கிழங்கு, அரைத்த பொடி, மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து உருளைக்கிழங்கை வேக வைக்க வேண்டும்.
* பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கிளறி, 5 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான பாண்டிச்சேரி உருளைக்கிழங்கு குருமா தயார்.

Image Courtesy: naliniscooking

[ of 5 - Users]
Story first published: Thursday, January 4, 2024, 18:17 [IST]
Desktop Bottom Promotion