இப்படி ஒருடைம் ரசம் செய்யுங்க.. குழம்பு, சாம்பார்-ன்னு எதுவும் கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க..

Posted By:

Paruppu Rasam Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் தினமும் ரசம் இல்லாமல் மதியம் சாப்பிடமாட்டார்களா? ஆனால் உங்களுக்கு தினமும் ஒரே சுவையில் ரசம் வைத்து போரடித்துவிட்டதா? அப்படியானால் ஒருமுறை பருப்பு கொண்டு ரசம் செய்யுங்கள்.

இந்த பருப்பு ரசம் செய்தால் குழம்பு, சாம்பார் என்று எதுவுமே தேவைப்படாது. முக்கியமாக இந்த ரசத்தை செய்தால் வீட்டில் உள்ளவர்கள் ஊற்றி ஊற்றி குடிப்பார்கள். அந்த அளவில் இது அவ்வளவு ருசியாக இருக்கும். அதோடு இது செய்வதும் மிகவும் சுலபமாக இருக்கும்.

Paruppu Rasam How To Make a Tasty Dal Rasam Recipe

உங்களுக்கு பருப்பு ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பருப்பு ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* துவரம் பருப்பு - 100 கிராம்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - சிறிது
* புளி - சிறிய எலுமிச்சை அளவு
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* ரசப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
* வெல்லம் - 1/2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - சிறிது
* பூண்டு - 2 பல்
* பெருங்காயத் தூள் - சிறிது
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் குக்கரில் துவரம் பருப்பை 2 முறை கழுவிவிட்டு சேர்த்து, அதில் 2 கப் நீரை ஊற்றி, மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து குக்கரை மூடி, அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மத்து கொண்டு மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு புளியை 2 கப் நீரில் ஊற வைத்து, அதை பிசைந்து வடிகட்டி சாறு எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த புளி நீருடன் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து அடுப்பில் வைத்து மூடி வைத்து மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் தக்காளியை வேக வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் பாதிக்கு மேலே பருப்பு நீரை சேர்த்து கொத்தமல்லியை சிறிது தூவி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, லேசாக பொங்கி வரத் தொடங்கும் போது, மேலே ரசப் பொடியை தூவி, மீதமுள்ள பருப்பு நீரை ஊற்றி கலந்து, உப்பு சுவை பார்த்து லேசாக கொதிக்க வைக்க வேண்டும்.
* அதே சமயம் மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், பூண்டு, பெருங்காயத் தூள், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, ரசத்துடன் சேர்த்து கலந்து, இறுதியாக வெல்லத்தை சேர்த்து கலந்து இறக்கினால், சுவையான பருப்பு ரசம் தயார்.

Image Courtesy: SIMPLY SAMAYAL

[ of 5 - Users]
Story first published: Friday, September 13, 2024, 13:25 [IST]
Desktop Bottom Promotion