பாலக்கீரையை இப்படி கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்தி-ன்னு எல்லாத்தும் செமயா இருக்கும்..

Posted By:

Palak Keerai Gravy In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி கீரை வாங்கி சமைப்பீர்களா? எப்போது கீரையை வாங்கினாலும், அதைக் கொண்டு ஒரே மாதிரி கடையல், பொரியல் என்று தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை கீரையைக் கொண்டு கிரேவி செய்யுங்கள்.

அதுவும் பாலக் கீரையை வாங்கினால், அதைக் கொண்டு கிரேவி செய்யும் போது, அது சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட மட்டுமின்றி, சப்பாத்தி, பூரியுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். இப்படி புதுமையாக கீரையை செய்யும் போது, பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

Palak Gravy How To Make a Palak Keerai Gravy

உங்களுக்கு பாலக் கீரை கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாலக்கீரை கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு...

* வெங்காயம் - 2
* பூண்டு - 10 பல்
* இஞ்சி - 1 துண்டு
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு..

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* முந்திரி - 10 (நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (கீறியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - சிறிது
* பாலக் கீரை - 1 கட்டு (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* வெண்ணெய் - 1 சிறிய துண்டு
* மல்லித் தூள் - 3/4 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, மிளகாய் தூள், உப்பு மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சீரகம், நறுக்கிய முந்திரி ஆகியவற்றை சேர்த்து வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி பச்சை வாசனை நன்கு வேக வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய பாலக் கீரையை சேர்த்து, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து 3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 3 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் வெண்ணெய், மல்லித் தூள், சீரகத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, எண்ணெய் பிரியும் வரை நன்கு வேக வைத்து இறக்கினால், சுவையான பாலக்கீரை கிரேவி தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, December 27, 2025, 14:50 [IST]
Desktop Bottom Promotion