சூப்பரான செட்டிநாடு பச்சை சுண்டக்காய் கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க

Posted By:

Pachai Sundakkai Kara Kuzhambu Recipe in Tamil: தினமும் சாம்பார் வைத்து போரடித்து விட்டதா? மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க வேண்டுமா? அதே சமயம் நல்ல சுவையான மற்றும் வீடே மணக்கும் அற்புதமான குழம்பை சாதத்திற்கு செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பச்சை சுண்டைக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த பச்சை சுண்டைக்காயை வைத்து தெருவே மணக்கும் அளவில் ஒரு சுவையான கார குழம்பை செய்யுங்கள்.

பொதுவாக கார குழம்பு என்றால் வெண்டைக்காய், வாழைக்காய் போன்றவற்றை வைத்துதான் செய்வோம். ஆனால் பச்சை சுண்டைக்காயை வைத்தும் அட்டகாசமான கார குழம்பை செய்யலாம். இந்த பச்சை சுண்டக்காய் கார குழம்பை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது சுவை அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த குழம்பு செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். பேச்சுலர்கள் கூட இந்த குழம்பை செய்து சாப்பிடலாம். இந்த குழம்பு சுண்ட சுண்ட அதன் சுவை மேலும் அதிகரிக்கும். எனவே இந்த குழம்பை இரண்டு, மூன்று நாட்கள் வைத்துக் கூட சாப்பிடலாம்.

Pachai Sundakkai Kara Kuzhambu Recipe How to Make Pachai Sundakkai Kara Kuzhambu

உங்களுக்கு பச்சை சுண்டக்காய் கார குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை சுண்டக்காய் கார குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்
- கடுகு - 1 ஸ்பூன்
- வெந்தயம் - 1/4 ஸ்பூன்
- சீரகம் - 1/2 ஸ்பூன்
- துவரம்பருப்பு - 1 ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 10
- பூண்டு பல் - 15
- கறிவேப்பிலை - சிறிது
- பச்சை சுண்டைக்காய் - 1 கப்
- புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு
- தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- சாம்பார் தூள் - 1 தேக்கரண்டி
- வெல்லம் - 1 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு

வறுத்து அரைக்க:

- தனியா - 1 ஸ்பூன்
- துருவிய தேங்காய் - 2 ஸ்பூன்
- வர மிளகாய் - 5

செய்முறை:

- பச்சை சுண்டக்காயைக் கழுவி இரண்டாக நறுக்கவும் அல்லது உரலில் போட்டு லேசாக இடிக்கவும். குழம்பில் போடும் வரை வரை தண்ணீரில் ஊற வைத்து தனியாக வைக்கவும்.

- வெங்காயம், பூண்டு பற்களைக் கழுவி தோலுரிக்கவும். தக்காளியை நறுக்கவும்.

- ஒரு கடாயை சூடாக்கவும். அதில் தனியா விதை, வர மிளகாய் மற்றும் தேங்காயை நல்ல மணம் வரும் வரை வறுக்கவும். ஆறவைத்து, தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைக்கவும்.

- கடாயை மீண்டும் சூடாக்கி எண்ணெயைச் சேர்க்கவும். கடுகு, வெந்தயம், சீரகம் மற்றும் துவரம் பருப்பை சேர்த்து வறுக்கவும்.

- பின்னர் வெங்காயம், பூண்டு பற்கள் மற்றும் கறிவேப்பிலையை வதக்கவும். பச்சை சுண்டக்காயைச் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.

- பின்னர் தக்காளியைச் சேர்த்து அது நன்கு குழையும் வரை வதக்கவும். 1 கப் தண்ணீர் சேர்த்து, மூடி வைத்து சில நிமிடங்கள் சுண்டக்காயை வேக விடவும்.

- பின்னர் அரைத்த மசாலா விழுது மற்றும் 1 கப் புளிச்சாறு சேர்க்கவும். நன்கு கொதித்ததும் சாம்பார் பொடி, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் வெல்லம் சேர்க்கவும்.

- குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் வரை காத்திருக்கவும். குழம்பு இந்த நிலைக்கு வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.

- அவ்வளவுதான் சூப்பரான பச்சை சுண்டக்காய் கார குழம்பு ரெடி. இதே ரெசிபியில் நீங்கள் மற்ற காய்களை வைத்தும் முயற்சிக்கலாம்.

[ of 5 - Users]
Story first published: Friday, April 10, 2026, 10:26 [IST]
Desktop Bottom Promotion