1/2 கப் பச்சைப் பயறு இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..

Posted By:

Susiyam Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைகளின் பசியை ஆற்ற ஒரு சத்தான ஸ்நாக்ஸை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பச்சை பயறு உள்ளதா? அப்படியானால் புரோட்டீன் அதிகம் நிறைந்த பச்சை பயறைக் கொண்டு அருமையான ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள்.

அதுவும் உங்கள் பிள்ளைகள் இனிப்புக்களை விரும்பி சாப்பிடுவார்களானால், அவர்களுக்கு பச்சை பயறு கொண்டு சுசியம் செய்து கொடுங்கள். இந்த சுசியம் செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறும் இருக்கும்.

Paasipayaru Susiyam How To Make a Susiyam Recipe

உங்களுக்கு பச்சை பயறு சுசியத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை பயறு சுசியம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பச்சை பயறு - 1/2 கப்
* தண்ணீர் - 1 கப்
* உப்பு - சிறிது
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* நாட்டுச்சர்க்கரை - 3/4 கப்
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
* நெய் - 2 டீஸ்பூன்

மேல் மாவிற்கு...

* கோதுமை மாவு - 1/2 கப்
* அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* சோடா உப்பு - 1 சிட்டிகை
* உப்பு - 1 சிட்டிகை
* தண்ணீர் - 3/4 கப்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் பச்சை பயறை நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் குக்கரில் அந்த பயறை போட்டு, 1 கப் நீரை ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, ஒரு டம்ளர் கொண்டு நன்கு மசித்து விட வேண்டும்.
* பின்பு அதில் 1/2 கப் துருவிய தேங்காய், 3/4 கப் நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் ஏலக்காய் தூள் மற்றும் நெய் சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, சோடா உப்பு, 1 சிட்டிகை உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின் அதில் 3/4 கப் நீரை ஊற்றி ஓரளவு நீர் போன்று கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் பாசிப்பயறு கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி, தட்டையாக தட்டி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் நன்கு சூடானதும், மிதமான தீயில் வைத்து, தட்டி வைத்துள்ளதை கோதுமை மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான சுசியம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, June 17, 2025, 20:07 [IST]
Desktop Bottom Promotion