1 கப் மைதா இருந்தால் போதும்... பார்த்தாலே வாயில் எச்சில் ஊரும் பால் பன்னை வீட்டிலேயே செய்யலாம்...!

Posted By:

Paal Bun Recipe in Tamil: டீக்கடைகளில் விற்கும் பால் பன் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது உங்கள் வீட்டில் இருப்போர் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் மைதாவும், பாலும் இருந்தால், அட்டகாசமான சுவையில் டீக்கடைகளில் விற்கும் சூப்பரான பால் பன்னை செய்து கொடுங்கள். இந்த பால் பன் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

பால் பன் என்றாலே அனைவருக்கும் வாயில் எச்சில் ஊறத்தொடங்கும். ஜீரா சொட்ட சொட்ட இருக்கும் பால் பன்னை சாப்பிட இனி டீக்கடைக்குதான் போக வேண்டுமென்று அவசியமில்லை. குறைவான பொருட்களை வைத்து நம் வீட்டிலேயே சூப்பரான பால் பன்னை செய்து எல்லோரையும் அசத்தலாம்.

Paal Bun Recipe How to Make Paal Bun

உங்களுக்கு இந்த சுவையான பால் பன்னை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பால் பன்னின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- மைதா மாவு - 1 கப்
- சுகர் பவுடர் - 3/4 கப்
- தயிர் - 1/4 கப்
- காய்ச்சிய பால் - 2 டேபிள் ஸ்பூன்
- சமையல் சோடா - 1/4 டீஸ்பூன்
- நெய் - 1 டேபிள் ஸ்பூன்
- சர்க்கரை - 1/4 கப்
- எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

- முதலில் ஒரு பவுலில் மைதா சுகர் பவுடர் சமையல் சோடா சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து விடுங்கள். அதன் பிறகு தயிர், காய்ச்சிய பால் இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

- இந்த கலவையில் தண்ணீர் சேர்க்க கூடாது சர்க்கரையை பவுடராக சேர்த்து இருப்பதால் அதுவே விலகி வரும். ஒரு வேளை மாவு மிகவும் கெட்டியாக இருந்தால் ஒரு டீஸ்பூன் மட்டும் தண்ணீர் சேர்த்துக் கொண்டால் போதும்.

- இந்த மாவை நன்றாக பிசைந்து விட்டு 15 நிமிடம் வரை மூடி போட்டு அப்படியே வைத்து விடுங்கள்.

- இந்த மாவு ஊறிக்கொண்டிருக்கும் நேரத்தில் சர்க்கரைப் பாகு தயாரித்துக் கொள்ள வேண்டும்.

- சர்க்கரைப் பாகு தயாரிக்க அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து சர்க்கரையை கொட்டி சர்க்கரை மூழ்கும் அளவிற்கு கொஞ்சமாக தண்ணீர் சேர்க்க வேண்டும்.

- சர்க்கரை முழுவதும் கரைந்து லேசாக பிசுபிசுப்பு தன்மையுடன் இருக்கும் பொழுது அடுப்பை அணைத்து விடுங்கள். இப்போது சர்க்கரைப் பாகும் ரெடியாகி விட்டது.

- பின்னர் அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் அடுப்பை சிம்மில் வைத்து விட வேண்டும்.

- பின்னர் தயார் செய்து வைத்த மாவை கையில் லேசாக எண்ணெய் தடவி எடுத்துக் கொள்ள வேண்டும்.

- மாவை உங்களுக்கு வேண்டிய அளவில் உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் போட்டு நன்கு சிவந்து வரும் படி பொரிய விட்டு தனியாக எடுத்து வைத்து விடுங்கள். சின்ன சின்ன உருண்டைகளாக பொரித்து வைத்துக் கொள்வது நல்லது.

- இதை உடனே சர்க்கரைப் பாகில் போடக் கூடாது நன்றாக ஆற வேண்டும். இவை அனைத்தும் நன்றாக ஆறிய பிறகு சர்க்கரைப் பாகில் போட்டு ஒரு பிரட்டு பிரட்டி உடனே எடுத்து விட்டால் சுவையான பால் பன் ரெடி!

[ of 5 - Users]
Story first published: Friday, October 10, 2025, 20:35 [IST]
Desktop Bottom Promotion