பன்னீர் வெச்சு.. ஒருடைம் இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்...

Posted By:

Nawabi Paneer Gravy Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு ஒரு ஸ்பெஷலான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் உங்கள் வீட்டில் பன்னீர் உள்ளதா? அப்படியானால் அந்த பன்னீரைக் கொண்டு வழக்கமாக செய்வது போன்று சைடு டிஷ் செய்யாமல், ஒருமுறை க்ரீமியாக ரெஸ்டாரண்ட்டுகளில் கொடுக்கப்படுவது போன்று கிரேவி செய்து சாப்பிடுங்கள்.

அதுவும் நல்ல க்ரீமியான பன்னீர் கிரேவி என்றால் அது நவாபி பன்னீர் கிரேவி தான். இந்த கிரேவி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். அதோடு இந்த கிரேவியை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.

Nawabi Paneer Gravy How To Make a Nawabi Paneer Curry Recipe

உங்களுக்கு நவாபி பன்னீர் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நவாபி பன்னீர் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

மசாலா அரைப்பதற்கு...

* பெரிய வெங்காயம் - 2
* இஞ்சி - 1 துண்டு
* பூண்டு - 4 பெரிய பல்
* பச்சை மிளகாய் - 3

பாதாம் முந்திரி விழுது செய்வதற்கு...

* பாதாம் - 10
* முந்திரி - 10
* கசகசா - 2 டீஸ்பூன்
* சுடுநீர் - தேவையான அளவு

கிரேவிக்கு...

* பன்னீர் - 300 கிராம் (சற்று பெரிய துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்
* நெய் - 2 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 4
* ஏலக்காய் - 3
* பிரியாணி இலை - 1
* அன்னாசிப்பூ - 1
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* தயிர் - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* காய்ச்சிய ஆற வைத்த பால் - 1 1/2 கப்
* பிரஷ் க்ரீம் - 1/2 கப்
* கசூரி மெத்தி - சிறிது
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் பாதாமை சுடுநீரில் 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். அதேப் போல் முந்திரி மற்றும் கசகசாவையும் ஒரு கிண்ணத்தில் போட்டு சுடுநீரை ஊற்றி, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஊற வைத்த பாதாமின் தோலை நீக்கிவிட்டு, மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் ஊற வைத்த முந்திரி மற்றும் கசகசாவை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக பேஸ்ட் போல் அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், மிதமான தீயில் வைத்து, பன்னீர் துண்டுகளை சேர்த்து, முன்னும் பின்னும் பொன்னிறமாக ப்ரை செய்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, அன்னாசிப்பூ, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து பச்சை வாசனை போய் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் முந்திரி பேஸ்ட்டை சேர்த்து கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் அடித்து வைத்துள்ள 1/2 கப் தயிரை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மிதமான தீயில் வைத்து 2-3 நிமிடம் கிளறி, காய்ச்சி ஆற வைத்த பாலை ஊற்றி கிளறி, கொதி வந்ததும், ப்ரை செய்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி, மூடி வைத்து மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து கிளறி, பிரஷ் க்ரீம், கசூரி மெத்தி மற்றும் சிறிது கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான நவாபி பன்னீர் கிரேவி தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, October 31, 2025, 19:28 [IST]
Desktop Bottom Promotion