நாட்டுக்கோழி வாங்குனா ஒருடைம் இப்படி கிரேவி செய்யுங்க... டேஸ்ட் சும்மா அள்ளும்...

Posted By:

Nattukozhi Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி நாட்டுக்கோழி வாங்குவீர்களா? அந்த நாட்டுக்கோழியை வாங்கினால் நீர் குழம்பு செய்து, வறுவல் தான் செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை நாட்டுக்கோழி வாங்கினால், அதைக் கொண்டு கிரேவி செய்யுங்கள்.

இந்த நாட்டுக்கோழி கிரேவியின் ஸ்பெஷலே கோழியை ஊற வைத்து, மசாலாவை வறுத்து அரைத்து சேர்ப்பது தான். இந்த கிரேவி சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தி, பூரியுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு சுலபமாக இருக்கும்.

Nattukozhi Gravy How To Make a Nattukozhi Gravy Recipe

உங்களுக்கு நாட்டுக்கோழி கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நாட்டுக்கோழி கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

ஊற வைப்பதற்கு...

* நாட்டுக்கோழி- 3/4 கிலோ
* தயிர் - 1 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப

வறுத்து அரைப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 4
* அன்னாசிப்பூ - 1
* இஞ்சி - 3 துண்டு
* பூண்டு - 15 பல்
* சின்ன வெங்காயம் - 12
* வரமிளகாய் - 4
* வரமல்லி - 3 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 3 கொத்து

கிரேவிக்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப

அரைப்பதற்கு...

* தேங்காய் - 2 சில்லு
* முந்திரி - 7-8
* சோம்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் நாட்டுக்கோழியை மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் கழுவிய நாட்டுக்கோழியை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அத்துடன் தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சிறிது உப்பு சேர்த்து பிரட்டி மூடி வைத்து 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, இஞ்சி, பூண்டு நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய், மல்லி, மிளகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி, குளிர வைத்து மிக்சர் ஜாரில் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து, ஏற்கனவே சிக்கனில் உப்பு சேர்த்துள்ளதால் அளவாக உப்பு சேர்த்து நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு 5 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 5 நிமிடம் கிளறி, கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி மூடி வைத்து, மிதமான தீயில் வைத்து 30 நிமிடம் வேக வைக்க வேண்டும். அதற்குள் மிக்சர் ஜாரில் தேங்காய், முந்திரி, சோம்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* 30 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அரைத்து வைத்துள்ள தேங்காயை ஊற்றி கிளறி, மீண்டும் மூடி வைத்து, 15 நிமிடம் வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான நாட்டுக்கோழி கிரேவி தயார்.

Image Courtesy: Apoorvaa's Virundu

[ of 5 - Users]
Story first published: Sunday, June 23, 2024, 12:55 [IST]
Desktop Bottom Promotion