சப்பாத்திக்கு 1/4 கப் பட்டாணி, 1 கப் காளான் வைச்சு இந்த சூப்பர் கிரேவியை செய்யுங்க..ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும்!

Posted By:

Mushroom Matar Masala Recipe in Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி காளான் வாங்கி செய்வீர்களா? காளானை வாங்கினால் எப்போதும் ஒரே சுவையில் கிரேவியைத் தான் செய்வீர்களா? சற்று வித்தியாசமான அதே சமயம் அசைவ உணவுகளே தோற்றுப்போகும் அளவில் சுவையான ஒரு காளான் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா?

அப்படியானால் காளானை பட்டாணியுடன் சேர்த்து இந்த மாதிரி சூப்பரான ஒரு கிரேவியை செய்யுங்கள். பட்டாணியுடன் சேர்த்து செய்யப்படுவதால் இந்த கிரேவி சுவையானதாக மட்டுமின்றி ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இந்த மஷ்ரூம் மட்டர் மசாலா தோசை, சப்பாத்தி, பூரி என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

Mushroom Matar Masala Recipe How to Make Mushroom Matar Masala

உங்களுக்கு மஷ்ரூம் மட்டர் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மஷ்ரூம் மட்டர் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- 1 கப் காளான்
- ½ கப் பச்சை பட்டாணி
- 2 பெரிய தக்காளி
- 2 பச்சை மிளகாய்
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
- 1 டீஸ்பூன் கொத்தமல்லி தூள்
- ½ டீஸ்பூன் கரம் மசாலா
- ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
- ¼ கப் ப்ரெஷ் கிரீம்
- ½ கப் பால்
- 3 டேபிள்ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி
- 1 டேபிள்ஸ்பூன் கசூரி மேத்தி
- தேவையான அளவு உப்பு

தாளிக்க:

- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஏலக்காய்
- 1 இன்ச் பட்டை
- 1 ஸ்பூன் சீரகம்

செய்முறை:

- தக்காளியை நறுக்கி முதலில் பச்சை மிளகாயுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

- காளானை நன்கு கழுவி இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

- ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி, முதலில் பட்டை மற்றும் ஏலக்காயை போட்டு தாளிக்கவும், பின்னர் சீரகத்தை போட்டு தாளிக்கவும்.

- சீரகம் வெடிக்கத் தொடங்கியதும், அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து, நன்றாகக் கலந்து, மூடி வைத்து 5 நிமிடங்கள் வதக்கவும்.

- பின்னர் காஷ்மீர் மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், மஞ்சள் தூள், கசூரி மேத்தி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

- நன்றாகக் கலந்து, எண்ணெய் பிரியும் வரை சமைக்கவும்.

- அதன் பிறகு பட்டாணி மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்.

- இதை 2 நிமிடங்கள் மூடி வைத்து, முக்கால் பதம் வேகும் வரை சமைக்கவும்.

- பின்னர் மசாலாவுடன் நறுக்கிய காளானையும் ½ கப் தண்ணீரையும் சேர்க்கவும். 4 முதல் 5 நிமிடங்கள் மிதமான தீயில் வேக விடவும்.

- காளான் நன்றாக வேகும் வரை மிதமான தீயில் வைக்கவும். இந்த நிலையில் கரம் மசாலாவைச் சேர்த்து நன்கு கிளறவும்.

- அதன் பிறகு, மிதமான தீயில் கிளறிக்கொண்டே ப்ரெஷான கிரீமை மெதுவாகச் சேர்க்கவும். மேலும் ½ கப் தண்ணீர் சேர்த்து ஒரு நிமிடம் வேக விடவும்.

- பின்னர் பால் மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி, குறைந்த தீயில் வைக்கவும்.

-பால் நன்றாக கொதித்து முடிந்தவுடன் நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து இறக்கினால் அருமையான மஷ்ரூம் மட்டர் ரெடி.

- இதை சூடான தோசை, சப்பாத்தி அல்லது பூரியுடன் பரிமாறவும்.

[ of 5 - Users]
Story first published: Monday, January 19, 2026, 17:30 [IST]
Desktop Bottom Promotion