அதிரசம் செய்யும் போது சொதப்பிருச்சா... கவலைப்படாதீங்க இப்படி பண்ணுங்க வேற சூப்பரான ஸ்வீட் ரெடி...!

Posted By:

அதிரசம் பெரும்பாலானார்களின் மிக விருப்பமான தின்பண்டமாக இருக்கிறது. வீட்டில் பெரியவர்கள் இருக்கும் போது செய்து சாப்பிட்டது இப்போது எங்கே நேரம் என அலுத்து கொள்பவர்களும் உண்டு. சிலரோ நான் பலமுறை முயற்சி செய்தும் சரியாக வரவில்லை என சலித்து கொள்பவர்களும் உண்டு.

எதுக்கு வீண் முயற்சி கடையில ஆசைக்கு வாங்கிக்கலாம் என்று சொல்பவர்களும் உண்டு. ஆனா சிலர் முயற்சி செய்து பதம் தப்பி போகும் போது என்ன செய்யலாம்னு யோசிப்பாங்க. அப்படி யோசிக்கறவங்களுக்காக இதோ பிரபல செப் விஜயகுமார் கூறும் டிப்ஸ்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

Mistakes Should Avoid While Prepare Adhirasam Explains Chef Vijayakumar
Photo Credit:

பொதுவான குறிப்புகள்:

- கடைல பச்சரிசி வாங்கும் போது நல்லா குண்டு குண்டா இருக்கற பச்சரிசியா பாத்து வாங்கனும்.
- அரிசி ரொம்பவும் ஈரப்பதம் இல்லாத அளவு காய விடக் கூடாது, அதுக்குன்னு அதிக அளவு ஈரமாவும் இருக்க கூடாது.
- வெல்லப்பாகு தயார் செய்யும் போது முழு கவனமும் அதுல தான் இருக்கனும். அதிரசத்துக்கு வெல்லப்பாகு பதம் ரொம்ப முக்கியம்.
- வெல்லப்பாக தண்ணீல சேர்த்து கரையாம வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கிடனும், இல்லனா அடுப்போட சூட்டுல கெட்டியாகும்.
- மிதமான சூட்டுல இருக்கும் போது தான் அரிசி மாவை சேர்க்கனும்.
- அரிசி மாவு சேர்த்து கிளறிய அதிரசமாவை சூடாக மூடி வைக்க கூடாது.
- மாவை மூடி ஊறவிடும் போது அடிக்கடி எடுத்து பார்த்து கிளறக் கூடாது.
- அதிரச மாவை ஒரு வாரம் வரை வெளியில் வைத்து பயன்படுத்தலாம்.
- மாவு மூழ்கி பொரியும் அளவிற்கு எண்ணெய் இருக்க வேண்டும்.
- எண்ணெய் உயர் மிதமான வெப்பநிலையில் இருக்க வேண்டும்.
- அதிரச மாவை எண்ணெயில் சேர்க்கும் போது மிதமான வெப்பநிலைக்கு மாற்றி விட வேண்டும்.
- அதிரசத்தை எண்ணெயில் இருந்து எடுக்கும் போது நன்றாக எண்ணெயை வடித்து எடுக்கவும்.

மாவு கெட்டியாகி விட்டால் என்ன செய்வது?

அதிரச மாவு வெல்லப்பாகின் பதம் தவற போகும் போது கெட்டியாகி விடும். அப்படி கெட்டியான மாவை என்ன செய்வது என்கிற குழப்பம் பலருக்கும் இருக்கும். அதற்கு நம்ம செப் சொல்லும் சில பயனுள்ள வழிகளை மேற்கொண்டு பார்க்கலாம்.

- மாவு ஓரளவிற்கு இறுக்கமாக இருந்தால் நெய் சேர்த்து நாம் பிசையும் போதே இளகி சரியாகி விடும்.

- அப்படி சரி செய்ய முடியாத அளவிற்கு இறுக்கமாக இருந்தால் கொஞ்சம் கூட புளிப்பில்லாத தயிரை எடுத்து மிக்ஸில் அடித்து மோர் பதத்தில் எடுத்து கொள்ளவும். அதை சிறிது சிறிதாக கைகளில் தொட்டு மாவில் சேர்த்து உருட்டைகளாக்கி எடுத்து தட்டி எண்ணெயில் சேர்க்கவும்.

- அதே போல் பாலை நன்றாக காய்ச்சி ஆற வைத்து அதை மாவுடன் சிறிது சிறிதாக சேர்த்து பிசைந்து பதத்திற்கு கொண்டு வரலாம். இவற்றை செய்யும் போது சுவையில் சிறிதளவில் மாற்றங்கள் இருக்கலாம். எனவே அவற்றை விரைவாக காலி செய்து விட வேண்டும்.

- மாவு உதிரி உதிரியாக கெட்டியாக இருந்தால் இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடிவைக்கவும். உதிரியாக இருக்கும் அதிரச மாவை இட்லி தட்டில் வைத்து 3-5 நிமிடங்களுக்கு வேகவிடவும். 5 நிமிடங்களுக்கு மேல் இருக்க கூடாது. பின் மாவை எடுத்து சிறிது நெய் சேர்த்து பிசைந்தால் அதிரச மாவு பதத்திற்கு வந்துவிடும்.

- எதை செய்தாலும் பதம் வரவில்லை, இதற்கு மேல் முயற்சிக்க பொறுமை இல்லாதவர்கள், ஒரு கப் பச்சரிசியை பாத்திரத்தில் சேர்த்து 5 கப் தண்ணீர் சேர்க்கவும். அரிசி அரை பதம் வெந்ததும் நமது அதிரச மாவையும் சேர்த்து நன்றாக கிளறவும். நன்றாக வேகவிட்டு முந்திரி, திராட்சை நெய்யில் வறுத்து சேர்த்தால் சுவையான சர்க்கரை பொங்கல் ரெடி!

மாவு மிகவும் தண்ணியாக இருந்தால் என்ன செய்வது?

- அதிரச மாவு மிகவும் தண்ணியாக இருந்தால், மீண்டும் ½ கப் பச்சரிசியை கழுவி காய வைத்து அரைத்து சலித்து மாவுடன் சேர்த்து பதத்திற்கு கொண்டு வரலாம்.

- வீட்டில் பச்சரிசி மாவு இருந்தால் அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சலித்து அதை மாவுடன் சேர்த்து பிசைந்து கொள்ளலாம். மாவு கொஞ்சம் கெட்டியாக இருந்தால் தான் உதிர்ந்து போகாமலும், அதிக அளவில் எண்ணெய் குடிக்காமலும் இருக்கும்.

இந்த குறிப்புகளை பயன்படுத்தி உங்க சின்ன சின்ன தவறுகள சரி பண்ணிக்கோங்க. முடிஞ்சா வரைக்கும் பாகு பதம் தவறாம பாத்துக்கோங்க.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion