பூரிக்கு ஒருடைம் மதுரை மட்டன் கைமாவை செஞ்சு பாருங்க.. டேஸ்ட் செமயா இருக்கும்...

Posted By:

Madurai Mutton Keema Recipe In Tamil: விடுமுறை நாட்கள் வந்தாலே வீட்டில் பல சுவையான அசைவ உணவுகளை சமைத்து சாப்பிட்டு, அந்த விடுமுறை நாளை பலரும் கொண்டாடுவோம். நீங்களும் அப்படி தானா?

அதுவும் இன்று காலை உங்கள் வீட்டில் பூரி செய்தால், அதற்கு ஒரே மாதிரி சிக்கன் கிரேவி செய்யாமல், மட்டன் கொத்துக்கறியை வாங்கி மதுரை மட்டன் கைமாவை செய்து சாப்பிடுங்கள். இந்த மட்டன் கைமா பூரியுடன் மட்டுமின்றி, சப்பாத்தி, சாதம், தோசை, பரோட் போன்றவற்றுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

Madurai Mutton Keema How To Make a Madurai Mutton Keema Recipe

உங்களுக்கு மதுரை மட்டன் கைமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மதுரை மட்டன் கைமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கிராம்பு - 2
* கல்பாசி - சிறிது
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தக்காளி - 2 (அரைத்து கொள்ளவும்)
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* மட்டன் கொத்துக்கறி - 1/2 கிலோ
* தண்ணீர் - தேவையான அளவு
* குழம்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* எலுமிச்சை - 1/2

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, சோம்பு, கிராம்பு, கல்பாசி, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், அரைத்த தக்காளியை சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், கரம் மசாலா சேர்த்து 1 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து மட்டன் கொத்துக்கறியை நீரில் நன்கு கழுவி விட்டு, வாணலியில் உள்ள மசாலாவுடன் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் ஒரு பெரிய டம்ளர் நீரை ஊற்றி, குழம்பு மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து 15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து கைமாவைக் கிளறி, அத்துடன் சிறிது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் பாதி எலுமிச்சை சாற்றினை சேர்த்து கிளறி, மீண்டும் 5 நிமிடம் மூடி வைத்து வேக வைத்து இறக்கினால், சுவையான மதுரை மட்டன் கைமா தயார்.

Image Courtesy: Erode Ammachi Samayal

[ of 5 - Users]
Story first published: Sunday, June 23, 2024, 9:09 [IST]
Desktop Bottom Promotion