இட்லிக்கு தக்காளி சட்னியை ஒருடைம் இந்த கும்பகோணம் ஸ்டைலில் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..

Posted By:

Kumbakonam Thakkali Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி செய்யப் போகிறீர்களா? அந்த இட்லிக்கு பெரும்பாலும் உங்கள் வீட்டில் தக்காளி சட்னியை செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை தக்காளி சட்னியை செய்வதாக இருந்தால், கும்பகோணம் ஸ்டைலில் தக்காளி சட்னியை செய்யுங்கள்.

இப்படி செய்யும் போது வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக ஒருமுறை இந்த சட்னியை செய்தால், பின் அடிக்கடி வீட்டில் உள்ளோர் செய்ய சொல்லிக் கேட்பார்கள்.

Kumbakonam Thakkali Chutney How To Make a Kumbakonam Tomato Chutney

உங்களுக்கு கும்பகோணம் தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கும்பகோணம் தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* தக்காளி - 4 (நறுக்கியது)
* பூண்டு - 8 பல்
* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன் + 2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* வெல்லம் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு சேர்த்து 2 நிமிடம் வறுத்த பின் உளுத்தம் பருப்பு சேர்த்து, நல்ல மணம் வந்து, லேசாக நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய் சேர்த்து வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கி, ஒரு தட்டில் வறுத்த பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், தக்காளியை சேர்த்து, அத்துடன் பூண்டு, கறிவேப்பிலை, புளி மற்றும் உப்பு சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து 10 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் சீரகத்தை சேர்த்து கிளறி, பின் சிறிய துண்டு வெல்லத்தை சேர்த்து கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து, அத்துடன் வதக்கிய தக்காளியையும் சேர்த்து, ஓரளவு கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான கும்பகோணம் தக்காளி சட்னி தயார்.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion