Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...

Posted By:

Kulfi Ice Cream Recipe In Tamil: கொளுத்தும் வெயிலில் நன்கு ஜில்லென்று குடிக்க அல்லது சாப்பிட அனைவருக்கும் பிடிக்கும். அதற்காக கடைகளில் விற்கப்படும் செயற்கை சுவையூட்டிகள் மற்றும் கெமிக்கல்கள் கலந்து விற்கப்படும் ஜூஸ், ஐஸ் என்று வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும் ஜூஸ், ஐஸ் க்ரீம் என்று செய்து சாப்பிட்டால், உடலுக்கு எவ்வித தீமையும் ஏற்படாது அல்லவா?

அதுவும் நீங்கள் குல்பி பிரியர் என்றால், அந்த குல்பியை வீட்டில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டே ஈஸியான முறையில் செய்யலாம். அதுவும் 1/2 லிட்டர் பாலும், 4 துண்டு பிரட்டும் இருந்தால், அட்டகாசமான சுவையில் குல்பியை செய்யலாம்.

Kulfi How To Make a Kulfi Ice Cream Recipe

இந்த குல்பியை ஒருமுறை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள். அதுவும் தற்போது கோடை விடுமுறை என்பதால், வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு இதை கட்டாயம் செய்து கொடுங்கள். இதனால் கடைகளில் ஐஸ் க்ரீம் கேட்கவே மாட்டார்கள்.

உங்களுக்கு குல்பியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குல்பி ஐஸ் க்ரீம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பால் - 1/2 லிட்டர்
* பாதாம் - 10
* முந்திரி - 10
* பிரட் - 4 துண்டு
* சர்க்கரை - 1/4 கப்
* ஏலக்காய் பொடி - சிறிது
* உப்பு - 1 சிட்டிகை

செய்முறை:

* முதலில் ஒரு அகலமான நாண்ஸ்டிக் கடாயை அடுப்பில் வைத்து, அதில் பாலை ஊற்றி கரண்டியால் நன்கு கிளறி விட்டு காய்ச்ச வேண்டும். அப்படி காய்ச்சும் போது, கடாயைச் சுற்றி பாலேடு உருவாகத் தொடங்கும். அதை அவ்வப்போது எடுத்து விட்டு கிளறி கொதிக்க வைக்க வேண்டும்.
* பாலானது நன்கு கொதித்துக் கொண்டிருக்கும் போது, மிக்சர் ஜாரில் பாதாம், முந்திரியைப் போட்டு கொரகொரவென்று பொடித்து, ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே மிக்சர் ஜாரில் 4 பிரட் துண்டுகளை முனைப் பகுதிகளை நீக்கி விட்டு, கைகளால் துண்டுகளாக்கிப் போட்டு அரைத்து பொடி செய்து, அதையும் தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு பாலானது ஓரளவு சுண்டி வந்ததும், அதில் சர்க்கரையை சேர்த்து கிளறி, மிதமான தீயில் வைத்து 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் பிரட் தூளை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அப்படி கிளறும் போது முனைகளில் சேரும் ஏடுகளை எடுத்துவிட்டு கிளறி விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து அரைத்து வைத்துள்ள பாதாம், முந்திரி பொடியை சேர்த்து கிளறி, பாலானது நன்கு கெட்டியாகத் தொடங்கி விட்டால், அதில் ஏலக்காய் பொடியை சேர்த்து ஒருமுறை கிளறி, பின் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கிளறி இறக்கி, நன்கு குளிர வைக்க வேண்டும்.
* பாலானது நன்கு குளிர்ந்ததும், அதில் ஐஸ்க்ரீம் மோல்டு அல்லது ஒரு டம்ளரில் ஊற்றி வைக்க வேண்டும்.
* பின் அந்த மோல்டு அல்லது டம்ளரை அலுமினியத் தாள் அல்லது பாலிதீன் கவர் கொண்டு நன்கு மூடி, நடுவே ஒரு துளையிட்டு, ஐஸ்க்ரீம் குச்சியை நடுவே வைத்து, ஃப்ரீசரில் சுமார் 8 மணிநேரம் வைத்து எடுக்க வேண்டும். முடிந்த வரை இந்த குல்பியை இரவு நேரத்தில் செய்து வைப்பது நல்லது. இதனால் எளிதில் குல்பி செட் ஆகிவிடும்.
* 8 மணிநேரம் கழித்து, ஃப்ரிட்ஜ்ஜில் இருந்து ஐஸ்க்ரீம் மோல்டை எடுத்து, ஒவ்வொன்றையும் சாதாரண நீரில் சிறிது நேரம் வைத்து, பின் எடுத்தால், எளிதில் குல்பி வந்துவிடும். இப்போது சுவையான குல்பி தயார்.

Image Courtesy: kurinji. com

[ of 5 - Users]
Story first published: Thursday, April 25, 2024, 17:00 [IST]
Desktop Bottom Promotion