கோவைக்காயும், வேர்க்கடலையும் வெச்சு.. ஒருவாட்டி இந்த சட்னியை செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்..

Posted By:

Kovakkai Peanut Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் இட்லி அல்லது தோசை தான் டிபனாக செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று இன்னும் முடிவெடுக்கவில்லையா? உங்கள் வீட்டில் உள்ளோர் இட்லி, தோசைக்கு வித்தியாசமான சைடு டிஷ் செய்து கொடுக்குமாறு கேட்கிறார்களா?

உங்கள் வீட்டில் கோவைக்காய் உள்ளதா? இதுவரை கோவைக்காய் வைத்து பொரியல், வறுவல் தான் செய்திருப்பீர்கள். ஆனால் அதைக் கொண்டு சட்னி செய்துள்ளீர்களா? இல்லையென்றால், அந்த சட்னியை உடனே ட்ரை செய்து பாருங்கள். அதுவும் இந்த கோவைக்காயுடன், வேர்க்கடவை சேர்த்து சட்னி செய்யுங்கள். இந்த சட்னி செய்வது மிகவும் சுலபம். மேலும் இந்த சட்னி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

Kovakkai Peanut Chutney How To Make a Kovakkai Verkadalai Chutney Recipe

உங்களுக்கு கோவைக்காய் வேர்க்கடலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோவைக்காய் வேர்க்கடலை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன் + 2 டீஸ்பூன்
* பச்சை வேர்க்கடலை - 4 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 5-6
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
* பூண்டு - 3 பல்
* கோவைக்காய் - 200 கிராம்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் வேர்க்கடலை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, அதன் பின் புளியை சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து கொரகொரவென்று அரைத்து அப்படியே வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய கோவைக்காய், பூண்டு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் தக்காளி மற்றும் ஒரு கைப்பிடி கொத்தமல்லியை சேர்த்து மூடி வைத்து 8-10 நிமிடம் மிதமான தீயில் வைத்து கோவைக்காயை நன்கு வேக வைக்க வேண்டும். அப்படி வேக வைக்கும் போது அவ்வப்போது மூடியைத் திறந்து கிளறி விட வேண்டும்.
* கோவைக்காய் நன்கு வெந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் கோவைக்காயை ஜாரில் உள்ள பொருட்களுடன் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான கோவைக்காய் வேர்க்கடலை சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, September 4, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion