பிரியாணிக்கே டஃப் கொடுக்கும் பட்டாணி சாதம் - எப்படி சிம்பிளா செய்றது-ன்னு பாருங்களேன்...

Posted By:

Coriander Peas Rice Recipe In Tamil: மதிய வேளையில் சமைக்க பிடிக்கலையா? சமையலறையில் நீண்ட நேரம் இருக்க பிடிக்கலையா? சிம்பிளா சமையலை முடிக்க நினைக்குறீங்களா? உங்கள் வீட்டில் பட்டாணியும், கொத்தமல்லியும் இருக்கா?

அப்படியானால் அவற்றைக் கொண்டு பிரியாணியே தோற்கும் அளவும் சுவையான ஒரு ரைஸ் செய்யலாம். இந்த கொத்தமல்லி பட்டாணி சாதம் செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறு சுவையாகவும் இருக்கும்.

Kothamalli Pattani Rice How To Make a Coriander Peas Rice Recipe

உங்களுக்கு கொத்தமல்லி பட்டாணி சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொத்தமல்லி பட்டாணி ரைஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பாசுமதி அரிசி - 1 கப்

மசாலா அரைப்பதற்கு...

* பட்டை - 3 சிறிய துண்டு
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 4
* அன்னாசிப்பூ - சிறிது
* ஜாவித்ரி - சிறிது
* மல்லி - 1 1/2 டீஸ்பூன்
* முந்திரி - 5
* பச்சை மிகாய் - 4
* கொத்தமல்லி - சிறிது
* புதினா இலைகள் - 5
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* பெரிய தக்காளி - 1 (நறுக்கியது)
* பச்சை பட்டாணி - 1/2 கப்
* உருளைக்கிழங்கு - 2 (துண்டுகளாக்கப்பட்டது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 1/2 கப்
* நெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் பாசுமதி அரிசியை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் அதில் நீரை ஊற்றி, 20-25 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாவித்ரி, அன்னாசிப்பூ, ஏலக்காய், மல்லி ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் முந்திரி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், மிளகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் 1 1/2 கப் நீரை ஊற்றி, உப்பு சுவை பார்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
* நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ஊற வைத்துள்ள பாசுமதி அரிசியை நீரை வடிகட்டிவிட்டு சேர்த்து கிளறி, குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து, 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் 2 டீஸ்பூன் நெய் ஊற்றி கிளறினால், சுவையான கொத்தமல்லி பட்டாணி சாதம் தயார்.

குறிப்பு:

ஒருவேளை இந்த ரெசிபிக்கு புழுங்கல் அரிசியை 1 கப் பயன்படுத்தினால், அதை 20 நிமிடம் நீரில் ஊற வைத்து, அதற்கு 2 1/2 கப் நீரை ஊற்றி சமைக்க வேண்டும்.

[ of 5 - Users]
Story first published: Thursday, December 19, 2024, 13:09 [IST]
Desktop Bottom Promotion