மழை நேரத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கணுமா? அப்ப இப்படி கொள்ளு ரசம் செஞ்சு சாப்பிடுங்க...

Posted By:

Kollu Rasam Recipe In Tamil: மழை ஆங்காங்கு தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. இப்படி மழை பெய்வதால் அடிக்கடி சளி, காய்ச்சல், இருமல் போன்ற பிரச்சனையால் அதிகம் அவதிப்படக்கூடும். இதற்கு காரணம் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பது தான். இப்படி பலவீனமாக இருக்கும் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த வேண்டுமானால், அவ்வப்போது கொள்ளு ரசம் செய்து சாப்பிடுங்கள்.

இதுவரை நீங்கள் கொள்ளு ரசம் செய்வதற்கு கொள்ளு பருப்பை வேக வைத்து செய்திருந்தால், இனிமேல் அப்படி செய்யாமல், கொள்ளுவை பொடி செய்து ரசம் வையுங்கள். இந்த ரசத்தை அடிக்கடி மழைக்காலத்தில் செய்து சாப்பிட்டால், உடல் வலுவாகவும், அடிக்கடி நோய்வாய்ப்படாமலும் இருக்கலாம்.

Kollu Rasam How To Make a Horse Gram Rasam Recipe

உங்களுக்கு கொள்ளு ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொள்ளு ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கொள்ளு - 50 கிராம்
* தக்காளி - 2
* கொத்தமல்லி தண்டு - சிறிது
* புளி - சிறிய எலுமிச்சை அளவு
* தண்ணீர் - 2 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பச்சை மிளகாய் - 2
* வரமிளகாய் - 1
* கொத்தமல்லி - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
* பூண்டு - 10 பல்
* பெருங்காயத் தூள் - சிறிது

தாளிப்பதற்கு...

* நெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* ரசப்பொடி - 1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் புளியை நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கொள்ளுவை சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து நன்கு வறுக்க வேண்டும்.
* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு, சற்று கொரகொரவென்று பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த கொள்ளு பொடியுடன், தக்காளி, கொத்தமல்லி தண்டு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் புளிச்சாற்றினை ஊற்றி, அத்துடன் மஞ்சள் தூள், அரைத்த கொள்ளு கலவை, சுவைக்கேற்ப உப்பு, பச்சை மிளகாய், வரமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, தட்டி வைத்துள்ள பூண்டு பற்கள், பெருங்காயத் தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் தீயைக் குறைத்து, ரசப்பொடியை சேர்த்து வதக்கி, கலந்து வைத்துள்ள ரசத்தை ஊற்றி, கொதிக்க வைக்க வேண்டும்.
* ரசமானது கொதிக்க தொடங்கும் போது குறைவான தீயில் வைத்து 1 நிமிடம் கொதிக்க வைத்து, சிறிது கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான கொள்ளு ரசம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, October 14, 2024, 14:09 [IST]
Desktop Bottom Promotion