ஒரே மாதிரி சாம்பார் செஞ்சு போரடிச்சுடுச்சா? அப்ப அடுத்தமுறை இப்படி கேரளா ஸ்டைல்-ல செய்யுங்க...

Posted By:

Kerala Style Varutharacha Sambar Recipe: உங்கள் வீட்டில் அடிக்கடி சாம்பார் செய்வீர்களா? எப்போதும் ஒரே மாதிரி தான் சாம்பார் செய்வீர்களா? ஒரே மாதிரி சாம்பார் செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் அடுத்தமுறை சாம்பார் செய்வதாக இருந்தால் கேரளா ஸ்டைல் வறுத்தரைச்ச சாம்பாரை செய்யுங்கள்.

இந்த சாம்பார் நீங்கள் வழக்கமாக செய்யும் சாம்பாரை விட வித்தியாசமான சுவையில் இருக்கும். அதே சமயம் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். மேலும் இந்த சாம்பார் சாதம், இட்லி, தோசை என அனைத்துடனும் சாப்பிட அருமையாக இருக்கும்.

Kerala Style Varutharacha Sambar Recipe

உங்களுக்கு கேரளா ஸ்டைல் வறுத்தரைத்த சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரளா ஸ்டைல் வறுத்தரைச்ச சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* துவரம் பருப்பு - 1/2 கப்
* உருளைக்கிழங்கு - 2 (தோலுரித்து பெரிய துண்டுகளாக்கப்பட்டது)
* முருங்கைக்காய் - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
* வெள்ளை பூசணிக்காய் - 2 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
* கேரட் - 2 (துண்டுகளாக்கப்பட்டது)
* வெண்டைக்காய் - 6 (துண்டுகளாக்கப்பட்டது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* சின்ன வெங்காயம் - 10 (தோலுரித்தது)
* புளிச்சாறு - 1 - 1/2 கப்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறிக் கொள்ளவும்)
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப

வறுத்து அரைப்பதற்கு...

* துருவிய தேங்காய் - 1/2 கப்
* மல்லி - 3 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

* தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெந்தயம், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் பெருங்காயத் தூள் சேர்த்து சில நொடிகள் கிளறி அதை ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி மற்றும் வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, அத்துடன் கறிவேப்பிலை மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, தக்காளி, வெங்காயம், அத்துடன் காய்கறிகள், பச்சை மிளகாய், மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து, 1 கப் நீரை ஊற்றி கிளறி குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் புளி நீரை ஊற்றி மீண்டும் அடுப்பில் வைத்து, கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் வறுத்து அரைத்து வைத்துள்ள சாம்பார் பொடியை சேர்த்து கிளறி, 5-6 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* சாம்பார் கொதிப்பதற்குள், மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி தாளிப்பதற்கு கொடுத்துள்ள கடுகு சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு, வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி, கொதித்துக் கொண்டிருக்கும் சாம்பாருடன் சேர்த்து, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான கேரளா ஸ்டைல் வறுத்தரைச்ச சாம்பார் தயார்.

Image Courtesy: archanaskitchen

[ of 5 - Users]
Story first published: Friday, November 10, 2023, 14:35 [IST]
Desktop Bottom Promotion