கத்திரிக்காயும், உருளைக்கிழங்கும் இருக்கா? அப்ப இந்த மாதிரி பருப்பு குழம்பு செய்யுங்க... செமயா இருக்கும்..

Posted By:

Kathirikkai Paruppu Kuzhambu Recipe In Tamil: தினமும் ஒரே மாதிரியான குழம்பு செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான குழம்பு செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் வீட்டில கத்திரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கு இருந்தால், அவற்றைக் கொண்டு பருப்பு குழம்பு செய்யுங்கள். இந்த கத்திரிக்காய் பருப்பு குழம்பு சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, தோசையுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு கத்திரிக்காய் பருப்பு குழம்பு எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கத்திரிக்காய் பருப்பு குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Kathirikkai Paruppu Kuzhambu Recipe

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* பெரிய உருளைக்கிழங்கு - 2
* கத்திரிக்காய் - 3
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 3 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* துவரம் பருப்பு - 1/2 கப் (1 மணிநேரம் நீரில் ஊற வைக்கவும்)
* தண்ணீர் - 2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது

தாளிப்பதற்கு...

* தேங்காய் எண்ணெய் - 2-3 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், உருளைக்கிழங்கை சேர்த்து 5 நிமிடம் வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கத்திரிக்காயையும் துண்டுகளாக்கி சேர்த்து வறுத்து, தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் உள்ள மீதமுள்ள எண்ணெயில், வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் கரம் மசாலா, சீரகத் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி, அதன் பின் தக்காளியை சேர்த்து 2-3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* தக்காளி நன்கு வதங்கியதும், ஊற வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து, அத்துடன் 2 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து துவரம் பருப்பை வேக வைக்க வேண்டும். பருப்பு வேக 1/2 மணிநேரம் ஆகும். ஒருவேளை உங்களுக்கு வேகமாக பருப்பு வேக வேண்டுமானால், குக்கரில் போட்டு 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ளலாம்.
* பருப்பு நன்கு மென்மையாக வெந்ததும், வறுத்து வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து, உப்பு சுவை பார்த்து வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்க வேண்டும்.
* பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும், சீரகம் சேர்த்து தாளித்து, வெங்காயம், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கிளறி நன்கு வதங்கியதும், மிளகாய் தூளை சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கி, குழம்பின் மேல் ஊற்றி கிளறினால், சுவையான கத்திரிக்காய் பருப்பு குழம்பு தயார்.

Image Courtesy: madrassamayal

[ of 5 - Users]
Story first published: Wednesday, October 18, 2023, 14:46 [IST]
Desktop Bottom Promotion